EXCLUSIVE: செல்லாத்தா.. நில்லாத்தா.. எல்லாம் கடவுள் அனுக்கிரஹம்.. சிலிர்க்கும் எல்.ஆர். ஈஸ்வரி
பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
சென்னை: "கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த ஒரு தனி மனுஷியோட குரல் பிடிக்குதுன்னா அதுக்கு காரணம் கடவுளுடைய அனுக்கிரஹம்தான்" என்கிறார் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி!!
தமிழ் சினிமா உலகில் ஒரு பக்கம் தேனினும் இனிமையான பி.சுசிலா, மற்றொரு பக்கம் தென்றலென தவழ்ந்த எஸ்.ஜானகி இவர்களின் ஆளுமையின் பயணித்தபோது, இவர்களுக்கு நடுவில் புதுவெள்ளம் ஒன்று தமிழகம் முழுவதும் ஊடுருவி பாய தொடங்கியது.
கவர்ச்சி குரல் குயிலாக உள்ளே நுழைந்த அந்த குரல் திடீரென கர்ஜித்து எழுந்து ஓடத் பயணிக்க ஆரம்பித்தது. அவர்தான் எல்.ஆர்.ஈஸ்வரி!!
தனி முத்திரை
தன்னந்தனி ஆளாகவே... தனித்து வளர்ந்து... தன் மேல் தனி முத்திரையை பதித்து கொண்டவர் இவர். கல்யாண வீடாக இருக்கட்டும், கோயில் திருவிழாக்களாக இருக்கட்டும், அங்கு எல்லாமே எல்.ஆர். ஈஸ்வரியின் குரல்தான். எந்த சுப காரியத்தையும் எல்.ஆர். ஈஸ்வரியை தவிர்த்து விட்டு நடத்தி விட முடியாது.
ஒன் இந்தியா தமிழ்
இன்றைய தலைமுறையினருக்கு எல்.ஆர்.ஈஸ்வரியை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய பாடல்களைத் தெரியாமலோ, கேட்காமலோ இருந்திருக்க மாட்டார்கள். இன்று அவரது பிறந்த நாள். "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் அவரிடம் பேசினோம். அப்போது தன் மகிழ்ச்சியுடன் தெரிவித்த கருத்துக்கள்தான் இவை:
கேள்வி: நீங்க எப்படி இருக்கீங்கம்மா? இந்த பிறந்த நாளுக்கு ஏதாவது ஸ்பெஷல் பிளான் இருக்கா?
நான் ஒரு பிளானும் வெச்சிக்கிறது இல்லை.. போடறதும் இல்லை.. பிளான் போடறது எல்லாமே கடவுள்தான். அவருடைய ஆசீர்வாதத்தோடு நான் நல்லா இருக்கேன். இப்பவும் நல்லா இருக்கேன். நாளைக்கும் நல்லா இருப்பேன். வருங்காலத்திலும் நான் நல்லா இருப்பேன் என்ற நம்பிக்கை என்கிட்ட எப்பவுமே இருக்கு. வருஷா வருஷம் இந்த பிறந்த நாள் அதுபாட்டுக்கு வருது, அது பாட்டுக்கு போகுது. எனக்கு என்னைக்கும் தேவை கடவுளின் ஆசி மட்டும்தான். அதனால நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமா நான் நல்லா இருக்கேன்.
கேள்வி: இன்னைக்கும் உங்களுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்கள்?
நான் என்னம்மா சொல்றது... லட்சக்கணக்குல, கோடிக்கணக்குல இருக்குற மக்களுக்கு இந்த ஒரு தனிமனுஷியோட குரல் பிடிக்குதுன்னா அதுக்கு காரணம் கண்டிப்பா நம்மையெல்லாம் மீறி இருக்கிற கடவுளுடைய அனுக்கிரஹம்தான். நான் எங்கே போனாலும் சரி, பக்தர்களும், ரசிகர்களும் இன்னமும் பழசை மறக்காம பாசத்தை காட்டறாங்க. இதைவிட எனக்கு என்ன பாக்கியம் இருக்க முடியும்?
கேள்வி: இப்போ புதுசா வர்ற பாடகர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?
இப்போ பாட வர்ற பசங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்க. எங்க காலத்துல நாங்கதான் மக்கா இருந்தோம். எல்லாருமே நல்லா படிச்சிட்டு வர்றாங்க. நல்லா பாடறாங்க. வாழ்க்கையில நல்லபடியா முன்னுக்கும் வர்றாங்க. அவங்கள பாத்துதான் நாங்க கத்துக்க வேண்டியிருக்கு. ஆனா அப்போ எங்களுக்கு இப்படியெல்லாம் தெரியல. இருந்தாலும் நாங்க வாழ்ந்த காலம் அது ஒரு பொற்காலம். இப்போ இருக்கிறது கம்ப்யூட்டர் காலம். அதனால இப்ப இருக்கிறவங்க கிட்டஇருந்து நிறைய விஷயங்களை கத்துக்க நான் ஆசைப்படறேன்.
கேள்வி: இப்பவும் உங்களுக்கு பாடல் வாய்ப்புகள் தொடர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஆமா.. சந்தோஷமா இருக்கு. இப்பக்கூட ஒரு பக்தி பாடல் பாடியிருக்கேன். "அம்மன் தாயே" என்ற ஒரு படத்தில்தான் பாட்டு பாடியிருக்கேன். அதை கேட்டுட்டு என் ரசிகர்கள் ரொம்பவே இன்ப அதிர்ச்சியா இருந்ததுன்னு சொன்னாங்க. வேறு வேறு படங்களில் பாடிய 15 பாடல்கள் விரைவில் வர உள்ளது. நிறைய பக்தி பாடல்களை விடாமல் பாடிக்கிட்டே இருக்கேன். சினிமா பாட்டுக்கும் சரி, பக்தி பாட்டுக்கும் சரி.. எனக்கு ஜனங்க கிட்ட எப்பவுமே இருக்கிற வரவேற்பு பார்த்து கடவுள்கிட்ட என் நன்றியை சொல்லிட்டே இருப்பேன்.
கேள்வி: உங்க பாட்டை இப்போ இருக்கிற தலைமுறைகள் கச்சேரிகள், டிவி ஷோக்களில் பாடி வருகிறார்கள். அதை கேட்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
அப்போவெல்லாம் நாங்க பாடும்போது ஒரே ட்ரேக்தான்ம்மா. சிங்கிள் டேக்கில் பாடி முடிக்கணும். ஒரு தப்பு வந்துட்டா கூட திரும்பவும் மொதல்ல இருந்து ஆர்க்கெஸ்ட்ரா வாசிக்க முழு பாட்டையும் பாடி ஆகணும். ஆனா இப்போ ரொம்ப அட்வான்ஸ் ஆயிடுச்சே. ஒரு ஒரு வரியும் தனித்தனியா கூட பாடலாம். ஆனா என்ன ஒரு வித்தியாசம், அப்போ நாங்க பாடும்போது ஆரோக்கியமா இருந்தது. இப்போ இப்படி கட் பண்ணி கட் பண்ணி பாடுறது சோம்பேறித்தனமான தெரியுது. அவ்வளவுதான். மத்தபடி பசங்களும் நாங்க பாடினதை சிடி மூலமா கேட்டுட்டு பாடறாங்க. அதுவும் ஈசியா பாடிடறாங்க. அவங்க குரல் வளம் அவ்ளோ அழகா இருக்கு. அதனால என் பாட்டை பாடினவங்க மட்டும் இல்லை.. இப்ப பாடிட்டு இருக்கிற எல்லா குழந்தைகளுமே நீடூழி வாழணும்" என்று வாழ்த்தி முடித்தார் எல்.ஆர். ஈஸ்வரி.
காதோடுதான்
இறுதியாக, நம் வாசகர்களுக்காக "காதோடுதான் நான் பாடுவேன்" என்ற பாடலையும் 2 வரிகள் பாடி அசத்தினார் எல்.ஆர்.ஈஸ்வரி. நாளைதான் இவரது பிறந்த நாள் என்றாலும் தமிழக மக்கள் இன்றும், நாளையும் என இரு தினங்களுமே கொண்டாடுவது தனக்கு பெருமையாக உள்ளதாக சொல்கிறார் எல்.ஆர். ஈஸ்வரி.
குங்கும வாசம்...
கோயில்கள் இருக்கும் இடமெல்லாம் என்றுமே ஒலித்து கொண்டிருக்கும் எல்.ஆர். ஈஸ்வரி, நீண்ட ஆரோக்கியத்தோடும், நிறைந்த ஆயுளோடும், குங்கும வாசம் வீசும் குரலுடன் என்றுமே வாழ "ஒன் இந்தியா தமிழ்" அவரை மனசார வாழ்த்துகிறது.