சென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்குமா?.. இந்த வீடியோவைப் பாருங்கள்
Recommended Video
சென்னை: சென்னை- புதுவை அருகே ஃபனி புயல் கரையை கடக்கும் என செக் நாட்டின் விண்டி டிவி வீடியோ கூறுகிறது.
தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறியுள்ளது. இது இன்னும் 36 மணி நேரத்துக்குள் ஃபனி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புயல் மிகவும் தீவிரமான புயலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பது குறித்து இன்னும் ஒரு நாள் கழித்துதான் சொல்ல முடியும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். மேலும் இது தமிழகம்- ஆந்திரம் இடையே கரையை கடக்கலாம் என கூறப்படுகிறது.
பவர்புல் ஃபனி
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் இந்த புயல் முழுக்க முழுக்க தமிழகத்துக்கானது. எனவே தமிழகத்துக்கு வந்தால் வறட்சி நீங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படும். சென்னை அருகே கரையை கடந்தால் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார். அதே வேளையில் இது மிகவும் பவர்புல்லாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இணையதள வீடியோ
இதையடுத்து இந்த புயல் எங்குதான் கரையை கடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சென்னை- புதுவை இடையே கரையைக் கடக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து செக் குடியரசு நாட்டின் வானிலை அறிவிப்பு இணையதளமான விண்டி டிவி வீடியோவில் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
சேதம்
அதில் சென்னை- புதுவை இடையே நகரும் புயல் மதுராந்தகம், காஞ்சிபுரம், வேலூர் நோக்கி ஆந்திரா செல்வது போல் உள்ளது. எனவே பார்ப்பதற்கு வர்தா புயல் போல் இருக்கிறது. வர்தா போல் சேதத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
தமிழகத்து தண்ணீர் பிரச்சினை
எதுவாக இருந்தாலும் இந்திய வானிலை ஆய்வு மையமோ , சென்னை வானிலை ஆய்வு மையமோ தெரிவித்தால் மட்டுமே புயல் எங்கு கரையை கடக்கும் என்பதில் உறுதித் தன்மை இருக்கும். எப்படியோ தமிழகத்து தண்ணீர் பிரச்சினை தீர்ந்தால் சரி.