"தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்".. சொன்னபடி திரும்பி வாருங்கள் எஸ்பிபி சார்!
சென்னை: இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடிய நீங்கள் சொன்னபடி திரும்பி வாருங்கள் சார் என ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கி கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆந்திரத்தை சேர்ந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் பல மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மறைந்துவிட்டார்.
அவரது பாடல்களை ஒலிக்கவிட்டும் அவரது பாடல்களை பாடியும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் மோகனுக்கு எஸ்பிபி பாடிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட்தான்.
அன்று மூச்சுவிடாமல் பாடிய ஆண் குயில்.. இன்று மூர்ச்சையாகி போன சோகம் #RIPSPB
எஸ்பிபி
படம் ஃபிளாப்பானாலும் எஸ்பிபியின் பாடலுக்காகவும் இளையராஜா இசைக்காகவும் எவ்வளவோ திரைப்படங்கள் ஓடின. உதய கீதம் திரைப்படத்தில் சங்கீத மேகம் தேன் சிந்தும்.. ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்பிபி பாடினார்.
இந்த தேகம்
இதில் ஒரு வரிகள் வருகின்றன. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன், கேளாய் பூமனமே... ஹோ... இந்த வரிகளை ரசிகர்கள் சொல்லி சொல்லி அழுகிறார்கள். அது போல் எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே.. என்ற வரிகளையும் நினைவுக்கூர்ந்து தன் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போல் துக்கத்தில் இருக்கிறார்கள்.
சந்தோஷம்
பொதுவாக நமக்கு துக்கம், சந்தோஷம், ஆறுதல், ஆலோசனை என எது வேண்டுமானாலும் துணைக்கு ஒருவரை நாம் நாடுவது இயற்கை. அது நம் உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம். ஆனால் எஸ்பிபியின் பாடல்கள் இருந்தால் போதும் இருவரிகளை கேட்டால் போதும் அத்தனை கவலைகளும் மறந்து போய்விடும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தேகம் மறைந்துவிட்டது
அன்று எஸ்பிபி கூறியதை போல், எஸ்பிபியின் தேகம் மறைந்துவிட்டது. எனினும் இசையால் மலர்வாரா என ரசிகர்கள் ஏங்குகிறார்கள். சொன்னபடி கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்களா எஸ்பிபி சார்? என கோடிக்கணக்கான ஏக்கம் கொண்ட கண்களுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!