அகலாத கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள்.. தென்னை ஓலைகளுடன் விவசாயிகள் பேரணி
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாபெரும் பேரணியில் பங்கேற்றனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்த தென்னைகளை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் கேள்விக்குறியானது.
கஜா புயல் தாக்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விவசாயிகள் பெரும் பேரணி நடத்தினர். தென்னை ஓலைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். தஞ்சை, பட்டுக்கோட்டையில் இப்பேரணி நடந்தது.
பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் இருந்து பட்டுக்கோட்டை மார்க்கெட் வரை தென்னை மரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வகையில் இளைஞர்கள் பேரணி சென்றனர். காசாங்குளத்தில் இருந்து பேரணியாக சென்று முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
தங்கள் வாழ்வாதாரமான தென்னங்கன்றுகள் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்க வேண்டும்.
அதுமட்டுமின்றி மறுசாகுபடிக்கு தேவையான தென்னங்கன்றுகள் மற்றும் தேவையான பொருட்களையும் நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல சேதமடைந்த வீடுகள் பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் நிவாரணத்தை அளிக்க வேண்டும்.
கிராமப்புறங்கள் அனைத்திற்கும் மின் இணைப்புகள் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் இந்திராகாந்தி் இளைஞர் அமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.