தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணி..போலீசாருடன் தள்ளுமுள்ளு
சென்னை: டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு பல்லாயிரம் விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
இதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக்கொடியில் ஏந்திக் கொண்டு விவசாயிகள் சிலர் டிராக்டரில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
திருச்சி
தஞ்சாவூரில் நடக்கவிருந்த டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். திருச்சியிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உழவர் சந்தையிலும், இருசக்கர வாகனத்தில் பேரணி நடந்தது. அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருசக்கர வாகன பேரணி
விருதுநகரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
இப்பேரணியானது விருதுநகர் எம்.ஜி.ஆர் சிலையில் துவங்கி தெப்பம், மெயின் பஜார், தேசபந்து மைதானம் போன்ற நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.
எஸ்டிபிஐ போராட்டம்
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று பேரணி நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நாடு முழுவதும் வேளாண்துறை சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று முனிச்சாலையிலிருந்து தெப்பக்குளம் வரை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஆண்களும் பெண்களும் தேசியக் கொடியை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூரில் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தொ.மு.ச., சங்கத்தினர் ஆட்டோவில் பேரணியாக சென்றனர். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். கடலூரில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடி கட்டி பேரணி நடந்தது. கோவையில் பேரணி நடந்தது.