நாளை முதல் பாஸ்டாக் கட்டாயம்தான்.. இருந்தாலும் ஒரு சிறு சலுகை.. மத்திய அரசு அறிவிப்பு
சென்னை: நாளை முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் கட்டாயம் என்ற போதிலும் கூட, ஒரு சிறு தளர்வை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் சுங்க சாவடிகள் அனைத்திலும் பாஸ்டாக் கட்டாயம் என்று ஏற்கனவே நெடுஞ்சாலை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவேளை பாஸ்டாக் இல்லாத வாகனங்கள் என்றால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.
எனவே ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள அனைத்து பாதைகளையும் 100% எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) வசதி கொண்டதாக மாற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இருப்பினும் குறுகிய காலமே இருப்பதால் அனைத்து வழிகளிலும் இதனை இன்னும் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், இந்த விதிமுறையில் சிறு, தளர்வு கொண்டு வந்துள்ளது மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம்.
வாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் FASTag கட்டாயம்.. பணமாக கொடுத்தால் இரட்டிப்பு கட்டணம்!
இதன்படி ஒவ்வொரு டோல்கேட்களிலும் அதிகபட்சமாக 75 சதவீதம் வழி பாஸ்டாக் வசதி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். 25 சதவீத வழித்தடங்கள் பாஸ்டாக் இல்லாத வாகனங்களும் செல்ல கூடிய வழித்தடமாக இருக்கலாம்.
இன்னமும் நிறைய வாகன ஓட்டிகள் பாஸ்டாக் ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஓட்டவில்லை என்பதால், அவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே பாஸ்ட்ராக் வசதிகொண்ட பாதைகளில் அவர்கள் நுழைந்தால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்பதால் 25 சதவீத வழித்தடங்களை அவர்களுக்காக ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த வழித்தடங்களில் சென்று கட்டணம் செலுத்தி செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு, இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவது என்னவோ உறுதிதான். எனவே, கூடிய விரைவில் பாஸ்டேக் ஒட்டிக் கொண்டு பயணிப்பது உங்களுக்கு பலன் தரும்.