சேட்டை செய்த மகன்.. செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூர தந்தை
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே குறும்பு செய்ததற்காக பெற்ற மகனை தந்தையே சரமாரியாக தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் முத்து(42). இவருடைய மகன் கார்த்திக்(11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார்.
கடந்த 3ம் தேதி காயங்களுடன் சிறுவனை பெற்றோர்கள் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சாவில் சந்தேகம்
இதனிடையே கார்த்திக்கின் தாய் நீலா(34) கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தன் மகன் சாவில் தனக்கு சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
கொலை
இதனால், சிறுவன் கார்த்தியின் தந்தை முத்து மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, மகனை கழுத்தை நெரித்து கொன்றதை முத்து போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
ஆத்திரத்தில் கொலை
போலீசார் முத்துவிடம் நடத்திய விசாரணையில், சிறுவன் கார்த்திக் அதிகமாக சேட்டை செய்வது வழக்கமாம். இது முத்துவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது.. இதனால், ஆத்திரமடைந்த முத்து தனது மகனை சரமாரியாக தாக்கி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
சிறை
இதையடுத்து முத்து மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சேட்டை செய்ததற்காக பெற்ற மகனையே தந்தை கொலை செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.