"உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் ரஜினி சார்.." கடலூர் மாணவரின் தந்தை உருக்கமான வீடியோ
சென்னை: உங்கள் காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், எனது மகனை மன்னித்துவிடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார் ஒரு தந்தை.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், ரஜினிகாந்த் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
" />ட்விஸ்ட் பாருங்க.. ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்! யாரு தெரியுமா?
போயஸ் இல்லத்தில் சோதனை
இதையடுத்து, போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன், ரஜினிகாந்த் வீட்டில் தீவிர சோதனைகளை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக சோதனை நடத்திய பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் இது போலியான அழைப்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீசார் விசாரித்தனர்.
8ம் வகுப்பு சிறுவன்
போலீஸ் விசாரணையில் இந்த தொலைபேசி அழைப்பு கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவனால் மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவந்தது. நேரில் சென்று விசாரித்தபோது, அந்த சிறுவனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாகவும், தனது தந்தையின் செல்போனை எடுத்து போன் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரது பெற்றோருக்கு அறிவுரைகள் கூறி, மறுபடியும் இது போல நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து திரும்பினர்.
உருக்கமான வீடியோ
இந்த நிலையில், அந்த சிறுவனின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உருக்கமாக கையெடுத்துக் கும்பிட்டபடி பேசுகிறார். அவர் கூறுகையில் பையன் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டவர். எனவே அவனை மன்னித்துவிடுங்கள். ரஜினிகாந்த சார்.. நானும் உங்களது ரசிகர் தான். நீங்கள் நடித்த எந்த திரைப்படம் வெளியானாலும் முதலில் ஓடிச்சென்று தியேட்டரில் பார்க்க கூடிய ஒரு ரசிகர். அண்ணாத்த படம் வெளியாகும்போதும் முதல் டிக்கெட் எடுக்கப் போவது நான்தான். பையன் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து செல்போனை எடுத்து உங்களுக்கு போனில் தொந்தரவு கொடுத்து விட்டார். உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னித்துவிடுங்கள். இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் உதவி
இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய அந்த குடும்பத்திற்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி விட்டு அறிவுரை கூறி விட்டு வந்துள்ளனர்.