செ.பா. போனால் என்ன.. சிட்டிங் எம்எல்ஏவுடன் கெத்து காட்டும் தினகரன்.. அடுத்தடுத்து அதிரடிகள்!
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திடீர் என்று ஏற்பட்டு இருக்கும் குழப்பம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
சென்னை: செந்தில் பாலாஜி விலகலால் தான் எந்த அளவும் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில் சிட்டிங் எம்எல்ஏவுடன் சசிகலாவைச் சந்தித்து புதிய மெசேஜை பாஸ் செய்துள்ளார் தினகரன்.
திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம் என்று வடிவேல் கூறுவதை போலத்தான் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. டிடிவி தினகரனின் லெப்ட் ஹேண்ட் என்று கருத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற வாரம்தான் திமுகவில் சென்று இணைந்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் டிடிவி தினகரன் மீண்டு வரவில்லை. ஆனால் அதற்குள் அமமுகவில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
என்ன நடக்கிறது தற்போது
தற்போது அமமுக கழகத்தில் சில உறுப்பினர்கள் மட்டும் டிடிவியிடம் இருந்து ''தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்'', 18 முன்னாள் எம்எல்ஏக்களில் ஒருவர் ஏற்கனவே திமுக சென்றுவிட்டார். இந்த நிலையில் மீதம் இருக்கும் 17 பேரில் 6-7 பேர் வரை தினகரனின் தொடர்பு எல்லையில் இல்லை என்று கூறுகிறார்கள். இதுதான் தற்போது டிடிவி தினகரனை கலவரத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
அதிரடி பயணம்
இந்த செய்தி வெளியே வந்ததும் தினகரன் வேகமாக களமிறங்கி, பெங்களூரு கிளம்பினார். சிறையில் இருக்கும் சசிகலாவை வேகமாக சென்று அவர் பார்த்தார். அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் 11 பேர் சென்றிருந்தனர்.
டிடிவி அதிரடி
அதேபோல ஆள் போனாலும் நானும் கெத்துதான் என்று நிரூபிக்கும் வகையில் ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வனையும் (விருத்தாச்சலம்) உடன் அழைத்து சென்று இருக்கிறார். இவர் ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமியுடன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இருக்கிறார்களா?
டிடிவி தினகரன் தனது அரசியல் பலத்தை காட்டவே இப்படி ஆளும்கட்சி எம்எல்ஏவை உடன் வைத்து சென்றார் என்றும் கூறுகிறார்கள். இதனால் டிடிவியின் ஆதரவு எம்எல்ஏக்கள், சிலீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த சந்திப்பு அதிமுக தரப்பை கொஞ்சம் கலங்கடித்து உள்ளது.
உடைகிறதா?
சசிகலாவுடன் என்ன ஆலோசனை நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அதிமுக, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய ஆலோசனை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இப்படியே இருந்தாலும் மேலும் மேலும் பலர் காணாமல் போய் கடைசியில் கட்சி கரைந்து போய் விடலாம் என்பதால்.
ஏற்கனவே
இது தொடர்பாக ஏற்கனவே சில அரசியல் செய்திகள் வந்தது. செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் சிலர் திமுகவிற்கு மாற வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். சிலர் அதிமுகவிற்கே திரும்பி செல்ல இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஆனால் அந்த மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இத்தனை வேகமாக நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதிரடிக்கு வாய்ப்புள்ளதா
தற்போதைய நிலையில் தினகரன் தரப்பு ஏதாவது அதிரடி காட்டினால்தான் இருப்பவர்களையும் தக்க வைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்றுதான் சசிகலாவுடன் ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் என்ன மாதிரியா அதிரடியை அவர்கள் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் பலாப்பழம் இருக்கும் திசைதான் ஈ போகும் என்பது தினகரனுக்கு தெரியாததில்லை.. இப்போதைக்கு அரசியலில் பலாப்பழமாக இருப்பது திமுக என்பதால் ஈக்களை அவர் எப்படிக் கட்டுப்படுத்துவார் என்பது எதிர்பார்ப்புக்குரியது.