தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கு.. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்க: சென்னை ஹைகோர்ட்!
தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது காலணிகளை வைத்து அவமதிப்பு செய்யபட்டது
இந்த வழக்கில் செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் குமார் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதம் முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
இந்த வழக்கில் இதுவரை இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என திராவிட கழகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டர் பதிவில் திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல தமிழகத்திலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என பதிவு செய்திருந்தார்
இந்த பதிவுக்கு பிறகுதான் தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் கோரி அவரின் தந்தை தாக்கல் செய்த மனுவில் தன்னுடைய மகன் ஒரு மனநோயாளி என்று மனுத் தாக்கல் செய்ததன் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கியது
போக்குவரத்து துறை மோசடி.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
ஆனால் இதுவரை இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்
இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு தாராபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தார்