இயக்குனர் புலம்பல்... நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார்
சென்னை: கொலை மிரட்டல் விடுத்தாக நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 7 ம் தேதி 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை சீயோன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் 'பொதுநலன் கருதி' படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை. இது தொடர்பாக தனது வருத்த்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்ததுடன், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.
அதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்த போது கருணாகரன் வரவில்லை. இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன், ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடும் பிரச்னைகளை சந்தித்தோம். இப்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுகிறார் என்றார். மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.