நவீன செயற்கைகோள் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டுபிடியுங்கள்.. தமிழக அரசுக்கு நிபுணர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாக குறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்
தமிழகத்திலுள்ள பெரும்பாலான நீர் நிலைகள் முற்றிலும் வறண்ட நிலையில், மக்கள் குடிப்பதற்கும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட நீரின்றி தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை தரமணியில் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதத்திற்கான நிலத்தடி நீர்மட்டம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின் படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமானது, 15 அடி வரை குறைந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டமானது 14 அடியும், வேலூர் மாவட்டத்தில் 12 அடியும் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளதாக, நிலத்தடி நீர்வளத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்!
இது தொடர்பாக தகவல் தெரிவித்த நீர்வள நிபுணரான உமாபதி, பருவமழை பொய்த்ததே இந்த வருடம் மிக கடுமையான வறட்சி ஏற்பட காரணம். இந்த நிலை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக வந்து கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் நிலையை போக்க அரசுடன் இணைந்து மக்களாகிய நாமும் செயல்பட வேண்டும். அரசு வழிகாட்டுதலின் படி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம், சிவகங்கை, கரூர், அரியலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. 400 அடிக்கும் மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும், தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.
எனவே நவீன செயற்கைகோள் உதவியுடன் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வேறு புதிய நீர் ஆதாரங்களை கண்டறிய நீர்வள நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்த இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை சீரமைத்து வழங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தற்போதைய வறட்சிக்கு மழை நீர் சேகரிப்பு, நீர் செறிவூட்டல் உள்ளிட்ட திட்டங்களில் உரிய கவனம் செலுத்தாததே காரணம் எனவும் நீர்வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்தது வறட்சிக்கு ஒரு காரணம் என்றாலும், மழை நீர் சேகரிப்பு மற்றும் செயற்கை நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்றாததால் தான் தற்போது வறட்சியில் சிக்கியுள்ளோம். இந்த நிலையை ஒரே நாளில் மாற்ற முடியாது.
கிட்டத்தட்ட 25 முதல் 30 ஆண்டுகளில் சந்திக்காத கொடும் வறட்சியை, தற்போது தமிழகம் சந்தித்துள்ளது. இனிவரும் காலங்களிலாவது அரசு - நிர்வாகம் - மக்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை முறையாக பின்பற்றினால் தான் இப்பிரச்சனைகளில் இருந்து மீள முடியும் என்றும் நீர்வள நிபுணர்கள் கூறியுள்ளனர்.