சென்னை தாம்பரம் அருகே பள்ளி வளாகத்தில் தீ விபத்து.. மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்.. பெற்றோர் பீதி!
சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் நாராயணா டெக்னோ தனியார் பள்ளியில் நுற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள புற்களில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகத்தால் அந்தத் தீ அங்கிருந்த மரங்கள் மற்றும் செடிகளில் பரவியது. இதனால் அப்பகுதியே பெரும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
அவசர அவசரமாக வெளியேற்றம்
இதனால் மாணவர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அழைத்து செல்ல அறிவுறுத்தல்
தீவிபத்து குறித்த செய்தியை அறிந்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோருக்கும் தீ விபத்து குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டு மாணவர்களை அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
தீ விபத்தால் பரபரப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து - காரணம்
பள்ளியை சுத்தப்படுத்தும் பணியின் காரணமாக புற்களுக்கு வைக்கப்பட்ட தீ வளாகத்தில் பரவியதா? அல்லது தீவிபத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.