37 கன்டெய்னர்களும் பாதுகாப்பா இருக்கா.. மணலியில் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு
சென்னை: அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள மணலி கிடங்கில் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.
கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அம்மோனியம் நைட்ரேட் எனும் அதிக விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கொரியாவிலிருந்து சென்னைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் தடை செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை அனுமதியின்றி இறக்குமதி செய்ததை அடுத்து 740 டன் ரசாயனத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த ரசாயனம் மணலி புதுநகர் சிஎஃப்எஸ் சரக்கு பெட்டக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கு.. வடசென்னை மக்களே அச்சம் வேண்டாம்.. சுங்கத் துறை அதிகாரிகள்
கொரோனா ஊரடங்கு
இதை ஏலத்திற்கு விடுமாறு 2019-இல் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏலத்தில் விடும் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. இதனிடையே லெபனானில் பெய்ரூட்டில் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதில் 100 பேர் பலியாகிவிட்டனர்.
அச்சம்
இந்த சம்பவத்தால் வடசென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடசென்னைக்குள்பட்ட மணலியில் வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி லெபனான் போல் விபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். இந்த கிடங்கில் வைக்கப்பட்ட ரசாயனத்தின் பாதுகாப்பு அம்சங்களை சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு
அப்போது அந்த ரசாயனங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் லெபனானுக்கு ஏற்பட்டது போல் சென்னைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் மணலி புதுநகர் சிஎஃப்எஸ் சரக்கு பெட்டக கிடங்கில் வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆய்வு நடத்தினார்.
ரசாயனம்
37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்ட ரசாயனம் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். சைலேந்திர பாபுவுடன் தீயணைப்பு துறையினரும் சென்றிருந்தனர். இந்த ரசாயனத்தை ஈ ஆக்ஷன் மூலம் ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.