சென்னை வளசரவாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. புகை மண்டலத்தால் மக்கள் பெரும் அவதி!
சென்னை: வளசரவாக்கத்தில் இன்று பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை மற்றும் ராமாபுரத்தை இணைக்கும் முக்கிய சாலையை ஒட்டி ஏரி ஒன்று உள்ளது.
இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் இங்கு சிறுவர்கள் தூண்டில் போட்டும் சிறிய ரக வலைகளை போட்டும் மீன்பிடிப்பது வழக்கம்.
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு.. கைது செய்யப்படுவாரா கமல்ஹாசன்?
காய்ந்த ஏரி
ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் ஏரி தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால் ஏரிக்குள் ஏராளமான மரங்கள் மற்றும் செடி கொடுகள் வளர்ந்து காய்ந்து போயிருந்தது.
குப்பை மேடான ஏரி
அதோடு மட்டுமின்றி சில சமூக விரோதிகள் சிலர் கட்டாந்தரையாக உள்ள இந்த ஏரியில் மது அருந்திவிட்டு மது பாட்டில்கள் மற்றும் டம்ளர்களை வீசி சென்றுள்ளனர். இதனால் ஏரியின் ஒரு புறம் குப்பை மேடாக காட்சியளித்தது.
பரவிய தீ
இந்நிலையில் ஏரியை ஒட்டி இருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் ஏரியில் தேங்கிக்கிடந்த குப்பையை கொளுத்தி விட்டனர். காற்றின் வேகத்தால் அந்தத் தீ மளமளவென காய்ந்த மரங்கள் மற்றும் செடி கொடிகளிலும் பரவியது.
கண் எரிச்சல்
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீப்பொறியும் புகையும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் கண் எரிச்சல் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர்.
கடும் அனல்
குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாமல் திணறினர். மேலும் மின்தடையும் ஏற்பட்டதால் கடும் அனலுக்கும் புழுக்கத்திற்கும் உள்ளாயினர்.
பெரும் பரபரப்பு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் காலியானதை தொடர்ந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.