இந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது!
சென்னை: ஒரே நாடு ஒரே மொழி என்கிற கோஷத்தின் மூலம் தமிழகத்தில் மீண்டும் இந்தி ஆதிக்க எதிர்ப்பு எனும் போராட்ட கனல் மூட்டப்பட்டிருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக ஒரே குரலாக தமிழகம் அணிவகுத்து நிற்கிறது.
இன்றைக்குத்தான் என்றில்லை... 87 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே தமிழர்கள் பெருங்கோபம் கொண்டு இந்தி திணிப்பு நடவடிக்கையை தடுத்தனர்.
வரலாற்றின் பக்கங்களில் முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் என இடம்பெற்ற 1938-வது ஆண்டைய தாய்மொழி பாதுகாப்புக்காக தமிழர்கள் நடத்திய யுத்தத்தின் வரலாறு இது:
முதல் இந்தி எதிர்ப்பு
1930களின் தொடக்கத்தில் இருந்தே இந்தி திணிப்பு முயற்சிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம் என பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்திக்கு எதிராக மகளிர் மாநாடுகள்
இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என அரசாணையை வெளியிட்டார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. இதுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கவும் அடிப்படையாக அமைந்தது. ராஜாஜியின் உத்தரவால் தமிழகமே கொந்தளித்தது. இப்போராட்டத்தில் பெண்களும் சமளவில் பங்கேற்று சிறைக்கு சென்றனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் என எண்ணற்ற பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திக்கு எதிரான மகளிர் மாநாடுகள் நடத்தப்பட்டன.
பிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்!
மொழிப்போர் தியாகிகள்
இந்த யுத்த களத்தில்தான் சிறையிலேயே தாளமுத்து, நடராசன் என்கிற போராளிகள் மாண்டு போயினர். தாய்மொழி காக்க தன்னுயிரையே ஈந்த முதலாவது மொழிப்போர் மறவர்கள் இவர்கள்தான்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபயணம்
திருச்சியில் இருந்து 1938-ம் ஆண்டு 100க்கும் அதிகமானாரோர் தமிழர் பெரும்படை என்ற பெயரில் நகரதூதன் இதழாசிரியர் மணவை ரெ. திருமலைசாமி தலைமையில் சென்னையை நோக்கி இந்தி திணிப்புக்கு எதிரான பிரசாரமாக நடைபயணம் மேற்கொண்டனர். மொத்தம் 42 நாட்கள் நடைபயணமாக 234 ஊர்கள் வழியாக சென்னையை இந்த தமிழர் பெரும் படை வந்தடைந்தது.
துயரங்களுக்கு நடுவே பெரும்படை
இந்த தமிழர் பெரும்படையில் பங்கேற்ற சிலர் நோயால் வழியிலேயே மாண்டு போயினர். காட்டாறுகளை கடந்துதான் இந்த பெரும்படை சென்னைக்கு நோக்கி பயணித்தது. அப்போது சென்னையில் தமிழர் பெரும்படைக்கு ஆதரவாக மீனாம்பால் சிவராஜ் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னைக்குள் நுழைந்த தமிழர் பெரும்படையை மறைமலை அடிகளார் வரவேற்றார். இப்பெரும்படையின் பயணத்தின் முடிவாக சென்னை மெரினா கடற்கரையில் பிர்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம்
அந்த பொதுக்கூட்டத்தில்தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தனித்தமிழ்நாடு முழக்கத்தை எழுப்பினார். இதையடுத்து பெரும் யுத்தமாகவே மாறிப் போனது இந்தி எதிர்ப்பு போராட்டங்கள். இதனால் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. இதுதான் தமிழர்கள் தொடுத்த முதலாவது தாய்மொழிக்கான யுத்தம்!