வரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா
மேட்டூர் அணையைத் திறந்த முதல்வர் திமுக முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மு.க ஸ்டாலின்
சென்னை: மேட்டூர் அணையின் வரலாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட முதல் திமுக முதல்வர்
என்ற பெருமை மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வரை அமைச்சர்கள் மட்டுமே மேட்டூர் அணையை பாசனத்திற்காக தண்ணீர் திறந்த விட்ட நிலையில் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து விட்ட முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
Recommended Video
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் மொத்த நீர் தேக்க அளவு 120 அடியாகும். அதில் அதிகபட்சம் 93.4 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக 88வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வருணபகவான் மனது வைத்த காரணத்தால் அணை கடந்த ஆண்டும் 100 அடி வரை வற்றாமல் இருந்தது. இந்த ஆண்டு 97 அடி வரை தண்ணீர் இருப்பு இருந்த காரணத்தினால் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின் - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
பொங்கி வரும் காவிரிக்கு அணை
திருச்சி அருகே காவிரிக்கு கல்லணை கட்டினார் கரிகாலசோழன். பழமை வாய்ந்த அந்த அணை இன்றைக்கும் அந்த மன்னனின் பெருமையை சொல்கிறது. கர்நாடகாவில் இருந்து பொங்கி வரும் காவிரி தண்ணீரை பாதுகாத்து வைப்பதற்காக சேலம் மாவட்டம் மேட்டூரில் பிரம்மாண்ட அணை கட்டப்பட்டுள்ளது
அணை கட்ட ஒப்புதல்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ளது மேட்டூர். காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்திலிருந்து பாசனப் பகுதி மக்களைக் காப்பாற்ற பிரம்மாண்ட அணை கட்ட அப்போதய ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இதையடுத்து அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி அரசு அனுமதி வழங்கியது.
10 ஆண்டுகளில் முடிந்த பணி
இதனையடுத்து 1925 ஜூலை 20ஆம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு மேட்டூர் அணையின் கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. கட்டுமான கூலி செய்ய வந்தவர்களுக்கு 2 அனா கூலியும் உணவும் கொடுத்து அணையை கட்டி முடித்தனர். அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு மொத்தம் ரூ.4.80 கோடியாகும்.
ஆளுநர் பெயர் சொல்லும் அணை
அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.
பல லட்சம் ஏக்கர் பாசன வசதி
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரி டெல்டா பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் அணைத்தண்ணீர் ஜீவ நதியாக திகழ்கிறது.
16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.
மின்சார உற்பத்தி
மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும் உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, ஈரோடு மாவட்டம் பாசூர் வரை, காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, 7 தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி துவங்க உள்ளது.
பெருமை வாய்ந்த அணை
ஆண்டுதோறும் பொங்கிப் பெருகி பிரவாகம் எடுக்கும் காவிரித் தாயின் வேகத்தைக் கட்டுப்படுத்த கட்டப்பட்ட மேட்டூர் அணை இன்று காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் ஜீவாதாரமாக மாறியுள்ளது. அந்தக் கடமையை இன்றளவும் மேட்டூர் அணை தவறாமல் செய்து வருவது அனைவருக்கும் பெருமை தருவதாகும்.
தொடர்ச்சியாக திறப்பு
மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பைப் பொருத்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்படும். சில ஆண்டுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகவே அணை திறக்கப்படுவது உண்டு. வறட்சி காலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் கூட அணை திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர்களால் அணை திறக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை
பொதுவாக அமைச்சர்கள்தான் அணையை திறந்து விடுவார்கள். கடந்த ஆண்டுதான் மேட்டூர் அணையை திறந்த முதல் தமிழக முதல்வர் என்ற பெருமையை பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக ஆட்சி காலத்தில் அணையை திறந்த முதல் முதல்வர் என்ற பெருமை எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.
தற்போது திமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர் என்ற பெருமை மு.க ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. ஸ்டான்லி நீர் தேக்கத்தை திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.