தலக் காவிரியை முத்தமிட்டது முதல் மழை.. வெதர்மேன் தரும் மகிழ்ச்சி செய்தி!
தலக்காவிரியில் முதல் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: உண்மையில் இது தமிழக காவிரிப் பாசனப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். காவிரி பிறக்கும் தலக் காவேரி பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த சீசனில் இதுதான் முதல் மழை. இந்த மழையின் வரவுக்காக காத்திருந்தனர் இரு மாநிலத்து மக்களும்.
கர்நாடகத்தின் குடகு மாவட்டம் தலக் காவேரியில் 147 மில்லி மீட்டர் மழையும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட பூக்கூட் பகுதியில் 189 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் வரும் நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
குடகு மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாம்.
நீர்வரத்து
அதேபோல ஹேமாவதி அணை அமைந்துள்ள சிக்மகளூர் பிரிவிலும் முடிகரேயில் 148 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஹேமாவதி அணையும் நீர்வரத்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மழை
கபிணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளாவின் வயநாடு மாவட்டம் பூக்கூட்டில் 189 மில்லி மீட்டர் மழையும், தரியோடு 142 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளன. இதனால் வரும் நாட்களில் கபிணிக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.
வால்பாறை
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 மில்லி மீட்டருக்கு மேலான மழை முதல் முதலாக இன்று பெய்துள்ளது. அதாவது 154 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாகும். வால்பாறை பகுதியில் பெரிய கல்லாரில் 100 மில்லி மீட்டர் மழையும், சின்னக் கல்லாரில் 72 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. 2வது நாளாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி, தேனி பெரியார் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு காணப்படுகிறது.
மழை உண்டு
அப்ப சென்னைக்கு மழை இல்லையா வெதர்மேன் என்று கேட்கலாம். இருக்காம். ஜூலை 8ம் தேதி முதல் கொஞ்சம் மழையை எதிர்பார்க்கலாமாம். அதேசமயம், 9ம் தேதி கன மழை இருக்காம். இருப்பினும் மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஒரே சமயத்தில் மழை இருக்கப் போவதுதான் உண்மையிலேயே சந்தோஷமான விஷயம் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.