முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற விமானத்தில் இறக்கிவிடப்பட்ட 4மாத குழந்தை மற்றும் தாய்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணித்த விமானத்தில் 4 மாத குழந்தை நிற்காமல் அழுததால், குழந்தையையும் தாயையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்.
குழந்தை அழுததற்காக பயணி இறக்கிவிடப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில், பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் 11.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் சண்முகம் உட்பட 95 பேர் பயணம் செய்ய தயாராக இருந்தனர்.
கைக்குழந்தை
அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டனர். அதே விமானத்தில் டெல்லியை சேர்ந்த ராகுல் (35), இவரது மனைவி லட்சுமிதேவி (30), இவர்களது 4 மாத கைக்குழந்தை ஆகியோரும் டெல்லிக்கு புறப்படத் தயாராக இருந்தனர்.
அமைதிப்படுத்த முடியவில்லை
அப்போது திடீரென குழந்தை 'வீல் வீல்' என கதறி அழத்தொடங்கியது. குழந்தையின் அழுகையை தாய் நிறுத்த எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. முயன்றும், தொடர்ந்து அழுதபடியே இருந்தது. விமானப் பணிப்பெண்களாலும் குழந்தையை அமைதிப்படுத்த இயலவில்லை.
பணிப்பெண்கள்
இது குறித்து விமான பணிப்பெண்கள் விமானியிடம் கூறினார்கள்.விமானி, கைக்குழந்தையின் தாயை விமானத்தை விட்டு கீழே இறக்கி ஓய்வுவறையில் அமரவைத்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லுங்கள் என்றார்.
விமானம் புறப்படும்
இந்த விமானம் மீண்டும் மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்லும். அப்போது அதில் வரச்சொல்லுங்கள் என்று விமானி, பணிப்பெண்களிடம் கூறினார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் உங்களை விமானத்தை விட்டு இறக்கிவிடுகிறோம். நீங்கள் மாலை விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்றார்.
25 நிமிடம் தாமதம்
இதையடுத்து அந்த பெண் வேறு வழியில்லாமல் கைக்குழந்தையுடன் விமானத்தை விட்டு கீழே இறங்கினார். மீதமிருந்த 93 பயணிகளுடன் அந்த விமானம், 25 நிமிடம் தாமதமாக பகல் 12.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்ததால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.