சூப்பர் நியூஸ்.. முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்.. விலை குறையும் வாய்ப்பு
சென்னை: மீன்பிடி தடை கால அளவு, 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது. இதனால் மீன் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது.
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று.. 11.30 முதல் 3.30 மணிவரை மக்கள் வெளியே வர வேண்டாம்
தடைக்காலம்
ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
தமிழகம் கோரிக்கை
இதை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தின. இதைஅடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பதில் மே 31-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1
மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 15 ஆம் தேதிதான் தடைக்காலம் துவங்கும். ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் இருக்கும். தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மீன் விலை குறையும்
மீன்பிடி தடை கால அளவு, 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைந்துள்ளது. இதனால், மீன் வரத்து அதிகரித்து மீன் விலை உயர்வு குறையும் என்று எதிர்பார்க்கலாம். எனவே மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை ரசித்து சுவைக்க முடியும்.