செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் கலெக்டர்களை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. இவ்வாறு மாவட்டத்தை வரையறை செய்ய சிறப்பு அதிகாரிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்திருந்தார். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு, தாலுகா பிரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், புதிய மாவட்டங்களுக்கு யாரையெல்லாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்ததோ, அவர்களையே, அந்தந்த மாவட்டங்களின் கலெக்டர்களாக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கள்ளக்குறிச்சிக்கு கிரண் குராலா, தென்காசி மாவட்டத்திற்கு, அருண் சுந்தர் தயாளன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவன் அருள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாகியுள்ளனர். அனைவருமே இளம் வயதினர் என்பது சிறப்பாகும்.
மகாத்மா காந்தி தற்செயலாக நடந்த விபத்தில் இறந்து போனார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்
இந்த மாவட்டங்களுக்கு போலீஸ் எஸ்பிக்களாக 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று காலை நியமிக்கப்பட்டனர். இதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக உள்ள, விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுனா சிங் தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாகவும், காஞ்சிபுரம் எஸ்.பியாக உள்ள கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், திருச்சி துணை கமிஷனர் மயில்வாகனன் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.