டெல்லி சிபிஐ அலுவலகத்தில்.. விஜய்யிடம் 5 மணி நேரம் துருவி துருவி விசாரணை!
டெல்லி: கரூர் துயரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள், விஜய்யிடம் 5 மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அவரிடம் விசாரணை நிறைவடைந்துவிட்டதா இல்லை, அடுத்த கட்டமாக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்ற தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.

முதலில் கரூரில் முகாமிட்டு விசாரித்த சிபிஐ அதிகாரிகள், தற்போது டெல்லியில் உள்ள தங்களது தலைமையகத்திற்கு வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், தவெக தலைவர் விஜயிடம் கடந்த ஜனவரி 12 அன்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் அவர் சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய் கூட்ட நெரிசலைக் கவனிக்கவில்லையா, நிகழ்வில் ஏழு மணி நேர தாமதம் ஏன், நெரிசலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, வாகனம் ஏன் முன்னோக்கி நகர்த்தப்பட்டது என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தபோதும், ஒரு சிலவற்றிற்குப் பதிலளிக்க அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிகிறது. அவரது பதில்களுக்கு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சிபிஐ அறிவுறுத்தியுள்ளதாம் .
விஜய் மீதான விசாரணை தொடரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தீவிரமாக உள்ளது. அதில் அவரது பெயரையும் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் காலை 11.30 மணிக்கு முதல் மாலை 4.30 மணி வரை விஜய்யிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் தற்போது அது நிறைவடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் அவர் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வருவார் என்றும் இன்றே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று 5 மணி நேரம் விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications