ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா பாக்கறியா.. செல்போனை தூக்கி அடித்த சிவகுமாரை மறக்க முடியுமா!
சென்னை: தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையும் அதன் பின்னர் அவர் வருத்தம் தெரிவித்ததையும் மறக்க முடியுமா.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர்
அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார்.
பரபரப்பு
உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் யாரிடமோ இதுகுறித்து முறையிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்கள் வருத்தம்
இது பெரும் விவாதப் பொருளானது. பொதுவாக அனைவரையும் யோகா, உடற்பயிற்சி செய்யுமாறு கூறும் சிவக்குமார் அதிகாலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்து முடித்துவிட்டார். அத்தகைய பொறுமைசாலியான அவர் பொது இடம் என்று கூட பார்க்காமல் இது போன்ற ஒரு செயலை செய்திருப்பது ரசிகர்களை மன வருத்தமடைய செய்தது.
சிவக்குமார் விளக்கம்
செல்போனை தட்டி விட்டது ஏன் என்பது குறித்து சிவக்குமார் விளக்கமளிக்கையில் பொது இடத்தில் பலர் இருக்கும் போது செல்பி எடுப்பது தவறு. பொது இடத்தில் மொத்தம் 300 பேர் இருக்கும் இடத்தில் செல்பி எடுப்பது தவறு. நான் காரில் இருந்து இறங்கி விழா மண்டபத்திற்கு செல்வதற்கு முன் என்னுடைய பாதுகாவலர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு வரிசையாக பலர் வந்து செல்பி எடுத்து எனக்கு இடையூறு செய்வது சரியா? என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? விஐபி என்றால் இப்படி புகைப்படம் எடுப்பதில் நியாயம் இருக்கிறதா? என்று கேட்டிருந்தார்.
|
பொறுமை
இதையடுத்தும் நெட்டிசன்கள் சிவக்குமாரை வறுத்தெடுப்பதை நிறுத்தவில்லை. இதனால் அவர் ஒரு வீடியோ மூலம் தோன்றி வருத்தம் தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில் ஆர்வமிக்க ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். அதை திரைப்பட கலைஞன் பொறுத்து கொள்ள தான் வேண்டும்.
நிரூபணம்
சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் எனது செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ஐ யாம் சாரி என இயல்பாக கூறியதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு 20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் சிவக்குமார் வாங்கிக் கொடுத்து மேன் மக்கள் மேன் மக்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்.