பிளாஷ்பேக் 2018.. இரு சீர்திருத்தவாதிகளை இழந்த இந்தியா!.. மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த இருவர்
சென்னை: சிலரது இறப்புகளையும் சாதனைகளையும் அந்த ஆண்டின் இறுதியில் மட்டுமல்லாது இந்த பூமி நிலைத்திருக்கும் வரை நினைத்து பார்க்கப்படுவர் என்றால் அவர்கள் கருணாநிதியும், வாஜ்பாயும்தான்.
கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அது போல் இந்திய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அதே மாதம் 16-ஆம் தேதி உயிரிழந்தார்.
ஒரே மாதத்தில் உயிரிழந்த இருவரும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் ஏராளமான பல நலத்திட்டங்களை வாரி வழங்கியுள்ளனர். முதலில் கருணாநிதி என எடுத்துக் கொண்டால் 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர். 13 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
எத்தனை சாதனைகள்
அவர் இந்தி மொழி எதிர்ப்புக்காக தனது 14ஆவது வயதிலேயே போராடியவர். போக்குவரத்துக்கென துறையை உருவாக்கியவர். மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இலவச கண் சிகிச்சை முகாம்கள், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம், கையில் இழுக்கும் ரிக்ஷாவை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கான்கிரீட் வீடுகள், காவல் துறைக்கென ஆணையம், மே 1-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தது.
தமிழ் இலக்கியம்
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவித்தது. கருணை இல்லம் அமைத்து கொடுத்தவர், உழவர் சந்தை அமைத்தவர் என இப்படியே சொல்லிக் கொண்டே சென்றால் அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும். தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தவர். இந்தியாவின் அனைத்து பிரதமர்களுடனும் பணியாற்றிவர். தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய தொண்டு ஏராளம்.
பாகிஸ்தான் ராணுவம்
அது போல் வாஜ்பாயை எடுத்துக் கொண்டால் அவரது ஆட்சிக் காலத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் பயணித்து பாகிஸ்தானுடன் உறவை விரும்பியவர் வாஜ்பாய். ஆனால் இதன் பிறகு மூன்று மாதத்திலேயே அதாவது, மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுத்து, இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.
சிறப்பு
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்க 4 வழிப்பாதைகளாக உருவாக்கப்பட்டது. இந்த 4 நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாக இருந்ததால் இதற்கு தங்க நாற்கர திட்டம் என பெயரிடப்பட்டது. இன்னொரு சிறப்பு என்னவென்றால் 4 நகரங்களும் 4 திசைகளில் உள்ளன. வடக்கில் டெல்லி, தெற்கில் சென்னை, கிழக்கில் கொல்கத்தா மற்றும் மேற்கில் மும்பை ஆகும். இந்த திட்டம் வாஜ்பாயால் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு முடிவுற்றது.
நல்லுறவு இல்லை
நரேந்திர மோடிக்கும் வாஜ்பாய்க்கும் நடுவே பெரிய நல்லுறவு இருந்ததாகக் கூற முடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மோடிக்கு நெருக்கடி கொடுத்தார் வாஜ்பாய்.
காங்கிரஸ் ஆட்சி
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியவர் வாஜ்பாய்தான். நாட்டின் பிரதமராக பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக 1962-ஆம் ஆண்டு நாடாளுமன்றம் சென்ற அவர் லோக்சபை உறுப்பினராக 7 முறையும், ராஜ்யசபை உறுப்பினராக இரு முறையும் இருந்தார்.
மறக்க முடியாத நட்சத்திரங்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் முதல் பிரதமர் இவர்தான். இத்தகைய பெருமைகளுக்கும் சீர்திருத்தங்களுக்கும் சொந்தக்காரர்களான வாஜ்பாயும், கருணாநிதியும் 2018-ஆம் ஆண்டில் இந்த நாடு இழந்ததை எத்தனை ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாது.