பிளாஷ்பேக் 2018: ஆண்டாள் சர்ச்சையையும் ஜீயரின் சோடா பாட்டில் பேச்சையும் எளிதில் மறக்க முடியுமா?
சென்னை: ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறு கூறியதாக எழுந்த சர்ச்சைகளையும் அதற்கு ஜீயர் பேசிய பேச்சையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக எழுதியதாக கூறப்படுகிறது. இதை அவர் அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் ஒன்றிலிருந்து குறிப்பு எடுத்துள்ளதாக வைரமுத்து விளக்கினார்.
எனினும் வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வைரமுத்துவை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினர். எனினும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
கண்டனம்
வைரமுத்துவை ஆர்ப்பாட்ட மேடைகளில் தரக்குறைவாக பேசுவது, அவரது பிறப்பை தவறாக பேசுவது என ஆர்ப்பாட்டம் அருவருக்கத்தக்க ஆர்ப்பாட்டமாக தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதற்கு வைரமுத்து ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.
மன்னிப்பு
இதெல்லாம் கூட பரவாயில்லை, ஆனால் ஜீயர் பேசிய பேச்சு இருக்கே அப்பப்பா... அதுதான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது. ஆண்டாள் குறித்து தவறாக பேசியதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார்.
கண்டனங்கள்
அப்போது அவர் பேசுகையில் கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் செய்ய மாட்டோம். இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் இனி அமைதியாக போக மாட்டோம் என்று கூறினார். இதற்கு ஜீயருக்கு எதிராக கண்டனங்களும் கேலிப்பேச்சுகளும் வந்தன.
பேச்சு
ஒரு ஜீயரின் வாயில் இருந்து பேட்டை ரவுடி பயன்படுத்தும் வார்த்தைகள் வரலாமா என மக்கள் கொதித்தனர். பின்னர் நிலையை அறிந்து ஜீயர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இதன் பின்னர் இந்த சர்ச்சை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. எனினும் ஆண்டாள் சர்ச்சையையும் ஜீயரின் பேச்சையும் யாராலும் மறக்க முடியாது.