பிளாஷ்பேக் 2018: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. டிசம்பர் மாதம் கதிகலங்க வைத்த "எச்ஐவி சுனாமி"
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24) 8 மாத கர்ப்பிணி. இவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்டு சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இதனிடையே சிவகங்கை மருத்துவமனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல மதுரையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பகீர்
இதையடுத்து அந்த நபர் சிவகாசி மருத்துவமனைக்கு போன் செய்து தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதாகவும் அந்த ரத்தத்தை யாருக்கும் தானமாக கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அந்த ரத்தம் சாத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டதை அறிந்த ரத்த வங்கி ஊழியர்களுக்கு பகீரென தூக்கி வாரிப் போட்டது.
3 பேர் பணிநீக்கம்
சிவகாசி மருத்துவமனை ஊழியர்கள் சாத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு எச்ஐவி பாதிப்பு ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. தானமாக பெறப்பட்ட ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணி உடம்பில் ஏற்றியதை அடுத்து இரு மருத்துவமனையை சேர்ந்த 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தனி வார்டு
கர்ப்பிணியின் 8 மாத சிசுவை பாதிக்காத வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிக்கும் உயர் தர சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனி வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில்
இதனிடையே இந்த சம்பவங்களால் குறித்து எச்ஐவி பாதிப்பு ரத்தம் கொடுத்த கமுதி இளைஞர் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் போலீஸார், அரசு மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தியதை அடுத்து உணவில் எலி மருந்தை குடித்து மயங்கினார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு
அங்கு தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டதால் தான் உயிரோடு இருக்க விரும்பவில்லை. என்னை சாகவிடுங்கள் என கூறிய இளைஞர் , பொருத்தப்பட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களையும் நீக்கினார். இதையடுத்து மருத்துவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இவர் எந்த நேரத்திலும் தற்கொலைக்கு மீண்டும் முயல்வார் என்பதால் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனவருத்தம்
அங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அந்த இளைஞருக்கு எச்ஐவி நோய் தொற்று ஏற்பட்டது அவரது தவறான செயல்களினால் என்றாலும் கூட தனக்கு அந்த தொற்று இருப்பதை அறிந்த அவர் தனது ரத்தத்தால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து குற்ற உணர்ச்சி அடைந்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது. இந்த நிலையில் அந்த இளைஞர் இறந்தது அனைவருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.