பிளாஸ்பேக் 2019: '9ல் குரு எடப்பாடிக்கு'.. அதிமுக ஆட்சியை தப்பிக்க வைத்த இடைத்தேர்தல் முடிவுகள்
சென்னை: 2019ம் ஆண்டு தமிழக அரசியலை பொறுத்தவரை நிச்சயம் வித்தியாசமான ஆண்டு, புதுச்சேரி சேர்த்து 40 லோக்சபா தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தை தான் அதிமுகவால் பெற முடிந்தது. அதுவும் ஒ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வென்றார். மற்ற அனைத்து இடங்களிலும் தோற்றுப்போனது.
ஆனால் அதேநேரம் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடிந்த திமுகவால் சட்டமன்ற தொகுதியில் அதேபோன்ற வெற்றியை பெற முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடியின் சமார்த்தியமான சமாளிப்பு கணக்காக பார்க்கப்படுகிறது.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 18 தொகுதிகளுக்கு தேர்தல் உறுதியானது. அதேநேரம் மரணங்கள், தண்டனை (ஒசூர் தொகுதி) உள்ளிட்ட காரணங்களால் 4 தொகுதிகளுக்கு தேர்தல் சேர்த்து அறிவிக்கப்பட்டது. அதாவது இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக பலம்
இதில் குறைந்த பட்சம் 4 இல் வென்றால் ஆட்சி தப்பிக்கும் என்றாலும்,. மேலும் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு உறுதியா இல்லை என்பது கேள்விக்குறியாக அப்போது இருந்தது. இதனால் 9 தொகுதிகளில் வென்றால தான் அதிமுக ஆட்சி நிலைக்கு என்ற நிலை ஏற்பட்டது. அதாவது அதிமுகவின் பலம் 109ஆக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்பட்டது.
கூட்டணிக்கு தொகுதிகள்
இதை உணர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க விரும்பி அதன்படி அமைத்தார்.கூட்டணி கட்சிகளுக்கு கேட்கும் நாடாளுமன்ற தொகுதியை விட்டுக்கொடுத்த எடப்பாடி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதியிலும் அதிமுகவே போட்டியிடும் என்று அறிவித்தார்.
ஆட்சி தக்கவைப்பு
கடுமையான எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் அதிருப்தியால் நாடாளுன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதேநேரம் சட்டசபை இடைத்தேர்தலில் அப்படி அதிமுக தோற்கவில்லை. 22 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்ககவைத்தது. அத்துடன் அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்பட்ட 5 எம்எல்ஏக்களையும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
கூட்டணி காரணம்
இதன் மூலம் அதிமுக 123 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் எடப்பாடி விரும்பி அமைத்த கூட்டணியை ஒரு காரணமாக சொல்லலாம்.. பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியவற்றை சேர்த்து அமைத்த கூட்டணியும் ஒரு காரணமாக சொல்லலாம்.
தென்மாவட்டங்களில்
இப்படி சொல்லப்படுவதற்கு காரணம் பாமக தேதிமுக ஆகியவை வடமாவட்டங்களில் வலிமையான கட்சிகளாக திகழ்ந்தன. இதன் காரணமாக சோளிங்கர், அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிளில் அதிமுக வெற்றி பெற்றது. அத்துடன் தென்மாவட்டங்களில் விளாத்திக்குளம், பரமக்குடி, நிலக்கோட்டை, சாத்தூர் ஆகிய தென் மாவட்ட தொகுதிகளிலும், கொங்கு மண்டலத்தில் சூலூரிலும் அதிமுக வெற்றி பெற்றது.
அமமுகவால் 4 அவுட்
திருவாரூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், ஒசூர், பெரம்பூர், பூந்தமல்லி , திருப்போரூர் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதில ஆண்டிப்பட்டி, பெரியகுளம்,திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதியில் அதிமுகவின் வெற்றியை காலி செய்தது அமமுக. இல்லாவிட்டால் இன்னும் கூடுதல் தொகுதிகளில் அதாவது 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.
இருவருக்குமே வெற்றி
இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தப்பியது. இதேபோல் வடமாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதனால் ஒருபக்கம் நாடாளுமன்ற தேர்தலில் வென்ற திமுகவும், சட்டமன்ற தேர்தலில் வென்றதற்காக ஆட்சியை தக்க வைத்த அதிமுகவும் இதை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.
விக்ரவாண்டி நாங்குநேரி
இதனிடையே திமுகவின் தொகுதியான விக்கிரவாண்டி மற்றும் காங்கிரஸ் தொகுதியான நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு மரண்ம், ராஜினாமா காரணமாக மீண்டும் தேர்தல் நடந்தது. இந்த இரண்டு தொகுதியிலும் கூட்டணி கட்சிகளின் உதவியால் 35 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன்பிறகே உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயார் என்று அறிவித்தது.