அந்த நாள் ஞாபகம்... ஓபிஎஸ் நள்ளிரவில் ஜெ. சமாதியில் நடத்தி தோற்றுப்போன தர்மயுத்தம் 1.0- ப்ளாஷ்பேக்
சென்னை: தமிழக அரசியலில் ஓபிஎஸ் என்ற பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் தர்மயுத்தத்தை தவிர்க்க முடியாது. ஆம்.. இப்போது இன்னொரு தர்மயுத்தம் அதாவது தர்மயுத்தம் 2.0 வெர்சனுக்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
2016-ல் ஜெயலலிதா மறைந்த போது உடனடியாக முதல்வராக பொறுப்பேற்றார் ஓ. பன்னீர்செல்வம். எல்லாமும் சுமூகமாக போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில் 'கொடுத்தவனே எடுத்துக் கொண்டானடி' என்கிற படலம் 2017 பிப்ரவரி 5-ந் தேதி அரங்கேறியது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சசிகலா தேர்வு செய்யபட்டார்.
இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சசிகலாவை முதல்வராக தேர்வு செய்து அறிமுகப்படுத்தியவர் சாட்சாத் ஓபிஎஸ்தான். ஆனாலும் முதல்வர் பதவி எனும் அதிகாரம் கையை விட்டுப் போகிறதே என்கிற விரக்தியின் உச்சத்துக்குப் போய் யார் யாரிடமோ திரைமறைவு சதி ஆலோசனை எல்லாம் நடத்தினார் ஓபிஎஸ்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 'அநீதியான தீர்ப்பு'.. கறுப்பு நாள் இது.. தமிமுன் அன்சாரி கடும் தாக்கு
முதல் தர்ம யுத்தம்
இந்த ஓரங்க நாடகங்களின் உச்சமாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி பின்னிரவில் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் என்ற பெயரில் முதலாவது தர்மயுத்தத்தை (ஆம்... வரலாற்றின் பக்கங்களில் முதலாம் மைசூர் போர்.. .2-வது மைசூர் போர் இருக்கும் போது இதற்கும் அப்படி இருக்கக் கூடாது என்ன?) தொடங்கினார் ஓபிஎஸ். அங்கே தியானத்தில் அமர்ந்தபடியே ஜெயலலிதாவின் ஆன்மாவுடனும் ஓபிஎஸ் பேசிவிட்டதாகவும் அறிவித்தார்.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு
அதாவது சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் நான் ராஜினாமா செய்தேன்; ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது; இதற்காக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கொந்தளித்தார். அப்போதும் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் தமிழகம் ஏற்கவில்லை. இதனால் ஓபிஎஸ் என்கிற நபர் பரிதாபத்துக்குரியவராக காட்சி தந்தார். பிறகு என்ன அவருக்கும் சில பல எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தந்தனர். குறிப்பாக அதிமுகவில் காணாமல் போயிருந்த மாஜி பிரமுகர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர்.
சசிகலா போட்ட சபதம்
அப்போது ஓபிஎஸ்-க்கு அதிமுக தொண்டர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். இதனாலேயே எம்.எல்.ஏக்களை தக்க வைக்க கூவத்தூருக்கு போய் முகாமிட்டார் சசிகலா. எப்படியும் முதல்வராகிவிடுவது என்கிற கனவில் தூங்காத இரவுகளாகவே சசிகலாவுக்கு அவை இருந்தன. ஆனால் சசிகலா விரும்பியது நிறைவேறாமல் சிறைவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறைக்கு போவதற்கு முன்னர், சசிகலாவும் ஜெயலலிதா சமாதிக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து ஓபிஎஸ்ஸை ஒழிப்பேன் என சபதம் எடுத்துவிட்டுப் போனார்.
தோற்றுப்போன தர்மயுத்தம்
பின்னர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தார்; ஆர்கே நகரில் தினகரனை வீழ்த்த ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தார். இப்படி எல்லா கூத்துகளையும் அரங்கேற்றிப் பார்த்தும் ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் முழு வெற்றிபெறாமலேயே அதிமுகவில் மீண்டும் இணைந்து கொண்டார். தம்மை நம்பி வந்தவர்களுக்கு எதுவுமே செய்யாமல் மகனுக்கு மட்டும் லாவகமாக லோக்சபா தொகுதி சீட்டை வாங்கிக் கொண்டு சுயநலத்தை சூடாக வெளிப்படுத்தினார் ஓபிஎஸ்.
விசாரணை ஆணையமும் ஓபிஎஸ்-ம்
எடப்பாடி அரசு ஊழல் அரசு என்றார்; சட்டசபைக்கு தேர்தல் வரப்போகிறது என்றார்; ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு விசாரணை ஆணையம் வேண்டும் என்றார். ஆனால் அதே எடப்பாடி அரசில்தான் துணை முதல்வராக இருக்கிறார்; எடப்பாடி அரசை கவிழ்க்க முடியாமல் அவர் முழு ஆட்சியையும் நிறைவு செய்யவும் போகிறார். உச்சகட்டமாக ஓபிஎஸ் சொன்ன விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட போதும், அந்த ஆணையத்துக்கு போய் தாம் சொன்ன மர்ம மரண குற்றச்சாட்டு குறித்து ஒருமுறை கூட சாட்சியமே அளிக்காதவராகவும் அம்பலப்பட்டுப் போனார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் 2.0
இத்தனை அவமானகரமான தோல்விகளுடன் கூடிய தர்மயுத்தத்தின் நாயகனாகிய அதே ஓபிஎஸ்தான்.. இப்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நானே எனும் புது கோஷத்துடன் தர்ம யுத்தம் 2.0 வெர்சனை தொடங்கப் போகும் முஸ்தீபுகளில் இருக்கிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸை மக்களின் முதல்வராக பொதுஜனங்கள் பார்த்த காலம் இருந்தது; ஆனால் தம் மக்களின் குடும்ப தலைவராக மட்டுமே எப்போதும் சிந்திக்கும் ஓபிஎஸ்-க்கு அந்த மக்கள் முதல்வர் தகுதி இல்லை என எப்போதோ தமிழகம் ஒதுக்கி வைத்துவிட்டது. இன்றளவும் ஓபிஎஸ்-ம் அவரது குடும்பமும் சமூகவலைதளங்களில் எதிர்கொள்ளும் விமர்சனங்கள்தான் அழியாத சாட்சியங்கள். ஆகையால் இந்த தர்மயுத்தம் 2.0 எடுத்த எடுப்பில் என்னவாகப் போகிறது என்பதையும் பார்க்க காத்திருக்கிறது தமிழகம்.