வரலாற்றில் முதல்முறை... புத்தாண்டில் மக்கள் இல்லாத மெரினா கடற்கரை.. மூடப்பட்ட சாலைகள்!
சென்னை: வரலாற்றில் முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரை காட்சி அளிக்கிறது. மெரினா செல்லும் மொத்த சாலைகளும் பேரிகார்டுகளால் இழுத்து மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
அது ஒரு கனா காலம். 2011 டிசம்பர் 31 தேதி அப்போது தான் சென்னை வந்து ஓராண்டு ஆகியிருந்ததால்..! லட்சம் மக்களில் ஒருவனாக நானும் மெரினா கடற்கரையில் முதல்முறையாக புத்தாண்டை வரவேற்றேன்.
மெரினா கடற்கரையும் திருவல்லிக்கேணியும். அதன் மேன்சகளுமே இன்றும் பேச்சுலர்களின் சொர்க்கம். கவலைகள் துயரங்களை எதுவாக இருந்தாலும் மெரினா கடற்கரையின் உப்புக்காற்றை சுவாசித்தால் காணாமல் போகும். புது நம்பிக்கை பிறக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டம்.. களை கட்டியது புதுச்சேரி.. கடற்கரை சாலையில் குவியும் மக்கள்
மக்கள் வெள்ளம்
புத்தாண்டை கொண்டாட்டம் என்பது கிராமங்களில் பெரிய அளவில் இல்லை என்பதால் சென்னை மெரினா புத்தாண்டு கொண்டாட்டத்தை பேரவலுன் அதிசயமாக பார்த்தேன். எங்கு பார்த்தாலும், மக்களின் வெள்ளம், ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை. எல்லாருமே செம்ம ஆட்டம்.
ஆக்ரோச ஆட்டம்
செல்போன் வெளிச்சங்களும், தாளங்களும், மக்களின் உற்சாக குரல்களும் மெய்சிலிர்க்க வைத்தன. வங்க கடலையும் ஆக்ரோசத்துடன் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு மக்களின் உற்சாகம் இருந்தது. அப்போது முதல் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மெரினா கடற்கரையில் தான் இருந்தது.
மக்கள் இல்லாத மெரினா
ஆனால் முதல்முறையாக மெரினா கடற்கரை 2021 புத்தாண்டை வரவேற்கவில்லை. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க தடை விதித்துள்ளதால் கொண்டாட்டம் இல்லாத, மக்கள் இல்லாத மெரினா கடற்கரையாக இன்று காணப்படுகிறது. இப்படி ஒரு டிசம்பர் 31தேதி சென்னை அதன் வரலாற்றில் முதல்முறையாக பார்க்கிறது. ஆம்.. வரலாற்றில் முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத மெரினா கடற்கரையை பார்க்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சென்னை மெரினா கடற்கரையில் 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் இரவு 10மணி அளவில் சாலைகள் காவல்துறையினர் பேரிகார்டகர்களை கொண்டு மூடியுள்ளனர். மெரினா சாலை மக்கள் இல்லாத சாலையாக வெறிச்சோடிக் கிடக்கிறது. இப்படியும் ஒரு புத்தாண்டை சென்னை வரவேற்கிறது என்றால் அது இதுவே முதல்முறை. இனி இப்படி ஒரு வரவேற்பு எந்த ஆண்டுக்கும் வரக்கூடாது என்று வேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.