ஒரு சிறிய ஆறுதல்.. கடந்த 8 நாட்களில் முதல்முறையாக.. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைவு
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 8 நாட்களில் முதல்முறையாக இன்று குறைந்துள்ளது.
தினமும் 50 பேருக்கும் குறையாமல் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியாகி வந்த நிலையில் இன்று 50-க்கும் கீழாக 48 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையை கடந்த 8 நாட்களில் வெளியான கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை வைத்து பார்த்தோம் என்றால் இதன் விவரம் உங்களுக்கு புரியவரும்.
ஏப்ரல் 1-ம் தேதி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 110 என சுகாதாரத்துறை அறிவித்தது. ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தி மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதற்கு முன்னர் வரை நாள்தோறும் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் இருந்து வந்தது. இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு தினம்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-பேருக்கு குறையாமல் இருந்து வந்தது.
ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 பேர்
ஏப்ரல் 3-ம் தேதி தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 102 பேர்
ஏப்ரல் 4-ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 74 பேர்
ஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 86 பேர்
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 50 பேர்
ஏப்ரல் 7-ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 69 பேர்
ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 48 பேர்
இப்படி தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை தினமும் 50 பேருக்கு குறையாமல் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக சற்று ஆறுதல்படக் கூடிய வகையில் இன்று கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 48 -ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை நாளை மற்றும் இனி வரும் நாட்களில் மேலும் குறைய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் வெறுமனே எதிர்பார்த்தால் மட்டும் அது சாத்தியப்படுமா என்றால் இல்லை. சமூக விலகலை கடைபிடித்து அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியிடங்களுக்கு செல்லாமல் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தமிழகத்தில் கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 21 பேர் நலம் பெற்றுள்ளனர். அதில் 72 வயது முதியவர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.