யானை, சிறுத்தை இருக்கு.. உயிர்ப் பலி ஏற்பட்டால் நாங்க பொறுப்பில்லை.. எச்சரிக்கும் வனத்துறை!
Recommended Video
சென்னை: வெள்ளியங்கிரி வனப்பகுதியில் குடிசைமாற்று வாரியம் வீடுகள் கட்டும் இடத்தில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது என்றும் வன விலங்குகளால் மனித உயிர் பலியானால், அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஆலந்துறை களிமங்கலம் பகுதியில், தென்கரை, பேரூர் செட்டிப்பாளையம், பச்சன வயல் ஆகிய கிராமங்களில் 4,710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே வனப்பகுதியை ஆக்கிரமித்து அதிகளவில் கட்டுமானங்களை கட்டிவருவதால் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைபயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்து வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வி.லோகநாதன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, தமிழக வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தடையில்லா சான்று வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டப்படும் இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், அவற்றுக்கு பிடித்தமான பயிர்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும், யானை நுழைவதைத் தடுக்க, குடியிருப்பை சுற்றி அகழி அமைக்கவேண்டும், வனவிலங்குகளின் நடமாட்டத்தை தெரிந்துக் கொள்ள கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை உள்ளிட்ட வனவிலங்குகளினால் மனித உயிர் பலிகள் ஏற்பட்டாலோ, கட்டிடங்கள் சேதம் அடைந்தாலோ அதற்கு வனத்துறை பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.