மொழி வழி மாநிலமாக பிரிந்த பின் உயர்ந்துள்ளதா தமிழகம்?
மொழி வழி மாநிலங்கள் பிரிந்த தினத்தினை தென்னக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று!!
சுதந்திர இந்தியாவில் மொழிவழியில் மாநிலங்களை பிரித்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழ தொடங்கியதையடுத்து, 1956ல் நவம்பர் 1-ம் தேதியன்று 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என பிரிக்கப்பட்டது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சங்கரலிங்கனார், நேசமணி உள்ளிட்டோர் இதற்கு பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.
[ஓ சமூகமே.. கொலைகளை விடவும் உன் மெளனம் கொடூரமானது #ராஜலட்சுமி ]
தோழர் ஜீவா
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நிகழ்வின்போது, சட்டப்பேரவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜீவா, "இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் 1-ந்தேதி முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
வட மாநிலங்கள்
இதையடுத்து, பிரிந்துபோய்விட்ட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தவர்கள், தங்களுக்கென ஒரு தனி மாநிலம் என்று கொண்டாட்டத்தில் அன்றுமுதல் இன்று வரை ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் 'நம் மாநிலம்' என்ற உணர்வு மேலோங்கி வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியையும் நம்மால் எட்ட முடிந்தது. இப்படி மொழி வாரியாக பிரிக்கப்படாததால்தான் வடமாநிலங்கள் இன்னமும் பின்தங்கியே இருக்கின்றன என்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கும் நாம் ஒன்றும் வளர்ச்சியை எட்டிவிடவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
முல்லை பெரியாறு
மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டதை நாம் ஒன்றும் மற்ற மாநிலங்களைபோல் உற்சாகத்துடன் கொண்டாட முடிவதில்லை. இதற்கு காரணம், இந்த மொழி வழி பிரிவால் நம்மிடமிருக்கும் பல பகுதிகள் கேரளா பக்கம் போய்விட்டது பெரும் வருத்தமே. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு இந்த பகுதிகள் எல்லாம் நம்முடன்தான் இருந்தன. ஆனால் கேரளா பக்கம் போய்விட்டது, இதன் விளைவு.. முல்லை பெரியாறு இன்னமும் நமக்கு தீராத பிரச்சனையாக இருக்கிறது. ஒருவேளை தேவிகுளம், பீர்மேடு நம்முடனேயே இருந்திருந்தால் கோர்ட், பஞ்சாயத்து, குடிநீர் பிரச்சனை எதுவுமே வந்திருக்காது.
கன்னியாகுமரி
எவ்வளவுதான் மொழிவழியாக பிரித்து நிறைய பகுதிகள் வேறு மாநிலங்களுக்கு போய்விட்டாலும் சில பகுதிகளை நாம் விட்டுத்தரவே இல்லை. நம் தலைவர்கள் உறுதியாக இருந்து போராடி நம்மிடமே அவற்றினை கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கன்னியாகுமரி மாவட்டம் அன்று கேரளாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்களின் ஓயாத போராட்டமே கன்னியாகுமரி நம் மாநிலத்துடன் இணைந்தது.
மபொசி முயற்சி
அதேபோல வட ஆற்காடு மாவட்டத்தின் பல பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இதில் நிறைய பகுதிகள் ஆந்திராவுக்கு போய்விடக்கூடாது என்று சிலம்பு செல்வர் ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்கள் வட எல்லை மீட்புக் குழு அமைத்து போராட்டமே நடத்தினார்கள். எனவே நம் தலைவர்கள் இப்படியெல்லாம் கடுமையாக போராடி, முயற்சிகளை முன்னெடுத்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளை நம்மிடமே விட்டு சென்று இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
உரிமைகள் கிடைத்ததா?
ஆனால் இந்த போராட்டம் எல்லாம் உபயோகிமாகி விட்டதா? அவர்கள் பட்ட பாடெல்லாம் முழுமை அடைந்துவிட்டதா? மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுவிட்டதால் நமக்கு எல்லாமே கிடைத்துவிட்டதா? இதோ இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னமும் முழு உரிமைகளோடு நாம் வாழ்கிறோமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.