நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் ... விட்டுக்கொடுக்காத கே.எஸ்.அழகிரி
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் உள்ளது.
வரும் 21-ம் தேதி இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் இருந்து 40 பேர் வரை நடசத்திரப் பேச்சாளர்களாக பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்பதால், திமுக, அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் 40 பேர் அடங்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
திமுக அளித்துள்ள நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் ஜெகத்ரட்சகன், உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், அதிமுக அளித்துள்ள பட்டியலில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், கே.ஆர்.ராமசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரோடு சேர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் உள்ளது. ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் அவர் இப்போது டெல்லி திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளவர்களின் பிரச்சார செலவு வேட்பாளரை சேராது என்பதாலும், அது கட்சிக்கணக்கில் வரும் என்பதாலும் தேர்தல் நேரத்தில் நட்சத்திரப்பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த அடிப்படையில் அரசியல் கட்சிகள் இந்தப் பட்டியல்களை அளித்துள்ளன.