முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் இறுதி அஞ்சலிக்கு பின் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த டி.என்.சேஷன் (வயது 86) கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்
இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்றார். அவர் அப்போது, நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார். இந்த சீர்திருத்தங்கள் இன்றவும் பேசப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.என்.சேஷன் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
தேர்தல் சீர்திருத்தங்கள்.. மிரண்ட அரசியல் ஜாம்பவான்கள்.. '90களில் தெறிக்கவிட்ட சேஷன்
டி.என்.சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, நிதன் கட்காரி, முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடையே டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இன்று (திங்கள்கிழமை) மாலை டி.என்.சேஷன் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.