அம்மா, உன்னை ரொம்ப பிடிக்கும்.. "அம்மு" உங்களையும் தமிழகத்துக்கு ரொம்ப பிடிக்கும்.. மறக்கமுடியாத ஜெ!
அம்மு என்கிற ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது
சென்னை: ஆண்கள் வரிசையாக நின்று அவரது காலில் சாஷ்டாங்கமாக விழும் அளவுக்கு மதிப்பு வாய்ந்த ஒரே பெண் அரசியல்வாதியாக திகழ்ந்தது ஜெ.ஜெயலலிதா மட்டுமே... இன்று அவரது பிறந்த நாள்!
வயது வரம்பின்றி அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா என்கிற அம்முவின் வாழ்க்கை தனிமையில் நகர்ந்தது.. கரடுமுரடானது.. சோகம் ததும்பியது.. அந்த சோகத்திலும் குழந்தைத்தனமும், பிடிவாதத்தனமும் கலந்து... குழைந்து காணப்பட்டதே உண்மை!
அம்முவுக்கு எல்லாமே அவங்க அம்மாதான்.. ஆனால் பக்கத்தில் அம்மாவால் இருக்க முடியாத சூழல்.. குழந்தை அம்முவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள, என்னவெல்லாமோ வாங்கி தருகிறார்.
பொம்மைகள்
ஆனால் அம்முவின் பாசம் அந்த பொம்மைகளில் இல்லை... அம்மாவின் கதகதப்புக்கு முன்னால் அம்முவுக்கு எதுவுமே இணையில்லை.. தேக்கி வைத்த மொத்த அன்பையும் ஒரு கடிதமாக அம்மாவுக்கு எழுதுகிறார் அம்மு.. "அம்மா, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்மா" என்று எழுதிய அந்த கடிதத்தை இரவெல்லாம் கண்விழித்தும் அம்மாவிடம் காட்ட முடியவில்லை.. இரண்டு நாள் கழித்துதான் அந்த கடிதத்தை படிக்க நேர்ந்த சந்தியா வெடித்து அழுதே விழுகிறார்!
சந்தியா
"நீ டான்ஸ் கத்துக்கணும் அம்மு" என்று அம்மா சந்தியா சொல்ல, "என்ன மம்மி.. நீதானே என்னை டாக்டரோ இன்ஜினியரோ ஆகணும்னு சொல்லுவே?" என்று கேட்கிறார் அம்மு. "படிப்பு தவிர நீ எல்லா திறமைகளையும் வளர்த்துக்கணும் அம்மு" என்றதும் உடனே சரி என்கிறார். டான்ஸ் டீச்சரும் வீட்டுக்கு வருகிறார். "காலில் விழுந்து குரு வணக்கம் வாங்கிக்கம்மா" என்று சந்தியா சொல்ல, "என்ன மம்மி நீதானே யார் கிட்டயும், எதுக்காகவும் தாழ்ந்து போகக்கூடாதுன்னு சொல்லுவே" என்கிறார்
அன்பு
உடனே அம்மா, "இது பெரியவர்களிடம் ஆசி பெறுவது, இதை செய்யலாம். சுயநலத்துக்காகத்தான் யார் கால்களிலும் விழக்கூடாது" என்றதும் மறு வார்த்தை அம்முவிடம் இருந்து வரவில்லை. அன்று தொடங்கியது குருபக்தி. ஆனால் அதற்கு முன்பே புதைந்திருந்தது தாயிடத்தில் இனம் புரியாத அன்பு.எல்லா சந்தேகங்களும், கேள்விகளும், பதில்களும், ஆலோசனையும், அறிவுரையும் தாயிடமே கேட்டு பெற்று பழகி விட்டார் அம்மு.
சபதம்
ஒருமுறை வெண்ணிற ஆடை படம் வெளிவந்த சமயம் அது. தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு போயிருக்கிறார் அம்மு. ஆனால் அங்கிருந்தவர்கள் எல்லாம் அம்முவை கேலி கிண்டலுடன் பார்த்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, "யாருக்கும் கூழை கும்பிடு போடக்கூடாது, யாரையும் கேவலமாக நடத்த இடம் தரக்கூடாது, யாரை பார்த்தும் பயப்பட கூடாது" என்பதுதான் அவை. இந்த 3 சபதங்களும் அன்று எடுத்ததுதான் பின்னாளில் உலக புகழ் அடையும்வரை அம்முவுடனே பயணித்தது.
முந்திரி பகோடா
எவ்வளவு பெரிய நடிகை ஆனாலும் குழந்தைத்தனம் கூடவே ஒட்டிக் கொண்டு வந்தது. குறிப்பாக அந்த முந்திரி பக்கோடாதான்! எத்தனை விதவிதமான சாப்பாடு பொருட்கள் இருந்தாலும் முந்திரி பகோடா மேல்தான் தனி உயிரே. அதுவும் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமர் அம்முதான். அம்முவுக்கு ஸ்பெஷல் முந்திரி பகோடா தயாராகி வீடு தேடி வந்துவிடுமாம். அதனால்தான் உட்லண்ட்ஸ் ஹோட்டல் மூடப்பட்டபோது நிறைய வருத்தப்பட்டார்.
அம்மா
இது சம்பந்தமாக ஒரு பேட்டியில்கூட, "நடிகையாக இருந்த காலத்தில், ஷூட்டிங் முடிந்து பல நேரங்கெட்ட நேரத்தில்கூட, டிரைவ் இன் உணவுகள் எனக்கு பலமுறை கைகொடுத்துள்ளன" என்று சொன்னாராம் அம்மு!! அம்மு ஆக தோன்றி அம்மாவாக மறைந்த ஜெயலலிதா பல காரணங்களுக்காக பலரால் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் சவால் நிறைந்த வாழ்க்கையும், அவரது சாதனையும், அவர் அடைந்த உயரமும் இன்றுவரை யாராலும் நிரப்பப்படவே இல்லை என்பதே உண்மை!