வட சென்னை காங். மாஜி தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!
சென்னை: வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார்.
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இறங்காமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராயபுரம் மனோ. வடசென்னையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ.
மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன். பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் ராயபுரம் மனோ. காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக, அகில இந்திய உறுப்பினராக, மாவட்ட தலைவராக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் மனோ.