இந்திரா காந்தியை கைது செய்த சிபிஐ டீமில் இருந்த மாஜி டிஜிபி லட்சுமி நாராயண் காலமானார்!
சென்னை: 1977-ம் ஆண்டு இந்திரா காந்தியை ஊழல் வழக்கில் கைது செய்த சிபிஐ டீமில் இருந்த முன்னாள் டிஜிபி வி.ஆர். லட்சுமி நாராயண் (வயது 91) சென்னையில் இன்று காலமானார்.
1951-ம் ஆண்டு பேட்ச் போலீஸ் அதிகாரியான லட்சுமி நாராயண், மதுரையில் துணை கண்காணிப்பாளராக பணியை தொடங்கினார். பின்னர் 1985-ம் ஆண்டு டிஜிபியாக பணி ஓய்வு பெற்றார்.
நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரின் சகோதரர் லட்சுமி நாராயண். 1970களின் இறுதியில் சிபிஐ இணை இயக்குநராகவும் பதவி வகித்தார் லட்சுமி நாராயண். 1977-ல் ஜனதா ஆட்சிக் காலத்தில் இந்திரா காந்தியை கைது செய்த சிபிஐ டீமில் இருந்தவர் லட்சுமி நாராயண்.
இந்திரா காந்தியின் அவசர நிலைத்துக்குப் பின்னர் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கூட்டணி அரசு அமைந்தது. அப்போது அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் துடித்தனர்.
ஆனால் உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமை காட்டினார். அப்போதைய ஜனசங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக்தான் பிரதமர் மொரார்ஜி தேசாயை மூளைச் சலவை செய்து இந்திராவை கைது செய்யும் முடிவை எடுக்க வைத்தவர். இந்திரா காந்தியும் கைது நடவடிக்கையை எதிர்பார்த்தார்.
1977-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதியன்று மாலை சிபிஐ குழு இந்திரா காந்தியை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றது. அப்போது இந்திரா காந்தி என்னை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லுங்கள் என வாதிட்டார். பின்னர் இந்திரா காந்தியை பத்கால் ஏரி அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் உள்துறை அமைச்சர் சரண் சிங்கால் இந்திராவின் கைது நடவடிக்கையை ஜீரணிக்க முடியவில்லை.
அதனால் சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்திரா காந்தி வீடு திரும்பினார் என்பது வரலாறு. இந்த வரலாற்றில் மறைந்த வி.ஆர். லட்சுமி நாராயணனும் இடம்பிடித்திருக்கிறார்.
லட்சுமி நாராயணின் இறுதி சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். லட்சுமி நாரயணுக்கு மகனும் 2 மகள்களும் உள்ளனர்.