ஆட்சியிலும் நாடகம் - தேர்தல் அறிவிப்பிற்கு முன்பும் நாடகம்.. முதல்வருக்கு கே.என். நேரு கண்டனம்
சென்னை: ஆட்சியிலும் நாடகம் - தேர்தல் அறிவிப்பிற்கு முன்பும் நாடகம் என ஏமாற்றி தமிழக மக்களுக்குத் தனது பதவிக் காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து முதலமைச்சர் பதவியில் பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெண்டரே விடாமல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் மக்களை ஏமாற்றியது போதாது என்று ஆட்சியை விட்டுப் போகப் போகின்ற நேரத்திலும் கூட ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சி முழுவதும் வெற்று அறிவிப்புகள்! இப்போது தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவும் வெற்று அறிவிப்புகள் என ஒரு 'வெற்று நடை போடும்' முதல்வர் பழனிசாமி இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
அடிக்கல் நாட்டு விழா
எங்கள் கழகத் தலைவர் ஸ்டாலின் பாலக்கோடு சென்று திரும்பிய பிறகு நேற்றைய தினம் அவசர அவசரமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று திட்டங்களுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
டெண்டர்
320.5 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணேகொல் அணைக்கட்டிலிருந்து வலது மற்றும் இடது புறமாக புதிய கால்வாய் திட்டம், அலியாளம் அணைக்கட்டிலிருந்து வலது புறம் 8.8 கிலோ மீட்டரிலிருந்து புதிய கால்வாய் மற்றும் ஜெர்தலாவ் கால்வாயின் 5.0 கிலோ மீட்டரிலிருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டங்கள் அவை. இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா? இந்தத் திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு விட்டார்களா என எந்த விவரங்களும் இல்லை. இத்திட்டங்கள் தொடர்பான டெண்டர் டாக்குமென்டுகளைக் கூட டவுன்லோட் செய்ய முடியவில்லை.
அடிக்கல் மட்டுமே
இத்திட்டங்களுக்குத் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு - வேலை உத்தரவும் வழங்கப்பட்டு விட்டதா? அது பற்றிய தகவல்களும் பொதுவெளியில் இல்லை!
ஆனால் அடிக்கல்லை மட்டும் நாட்டி வைத்து விட்டார் முதல்வர் பழனிசாமி- அதுவும் காணொலிக் காட்சியில்!
முதல்வருக்கு கண்டனம்
ஆட்சியிலும் நாடகம் - தேர்தல் அறிவிப்பிற்கு முன்பும் நாடகம் என ஏமாற்றி தமிழக மக்களுக்குத் தனது பதவிக் காலத்தின் கடைசி நாள் வரை துரோகமே செய்வது என்று முடிவு செய்து முதலமைச்சர் பதவியில் பழனிசாமி செயல்படுவது கண்டனத்திற்குரியது.
வெற்று நடை என மாற்றுங்கள்
இதுதான் அரசு செலவில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தின் இலட்சணமா? ஆகவே இந்தப் பிரச்சாரத்தின் தலைப்பை "வெற்று நடை போடும் தமிழகம்" என்று மாற்றுங்கள். அப்படியொரு பிரச்சாரத்தைக் கட்சி நிதியை வைத்து நடத்திக் கொள்ளுங்கள். ஆனால் அரசு கஜானாவில் செலவழித்து - கோட்டையில் நின்று அரசு விழா நடத்தி - மக்களை ஏமாற்றாதீர்கள் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு நேரு கூறியுள்ளார்.