முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு.. கேரள அரசு வழங்கியது
சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது கேரள அரசு. இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்ததால் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
சிபிஐ விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில், நம்பி நாராயணன் (78), விஞ்ஞானியாக பணியாற்றினார். திறமையான ஊழியராக வலம் வந்தார். ஆனால், திடீரென, 1994ம் ஆண்டு, இவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தது கேரள காவல்துறை.
ரகசியம்
இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டார் நம்பி நாராயணன். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நம்பி நாராயணன், இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.
நிரபராதி
கேரள போலீசாரிடம் இருந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் அதற்குள்ளாக நம்பி நாராயணனை இஸ்ரோ பணி நீக்கம் செய்திருந்தது.
நஷ்ட ஈடு
இதையடுத்து தனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான உளைச்சலுக்கு கேரள அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, விசாரணை நடத்த, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
நிதியுதவி
ஏற்கனவே, நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. அது உச்ச நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு வழங்கியது. அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நம்பி நாராயணனுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேரள அரசு வழங்கியுள்ளது.