நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் சிறை!
சென்னை: நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். அவர் பணிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.
ஓய்வுக்குப் பின்னரும் கர்ணன் தொடர்பான சர்ச்சை ஓயவில்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை மிக மோசமாக, ஆபாசமாக விமர்சித்து நீதிபதி கர்ணன் பேசிய வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டு சர்ச்சையானது.
இதனால் கர்ணன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கை குறித்து டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, கர்ணனிடம் விசாரணை நடத்தினோம்; இனி ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடமாட்டேன் என கர்ணன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலில் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதாரங்கள் இருந்தும் கர்ணனை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் சென்னை ஆவடியில் இன்று முன்னாள் நீதிபதி கர்ணனனை சென்னை மத்திய குற்றப்ப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு சுமத்திய வழக்கில் கர்ணன் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.