ஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!
சென்னை: 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து, 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, பால கிருஷ்ண ரெட்டி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம் இதை சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தற்போது செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. ஓசூர் தொகுதியும் காலி இடம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் காலியான சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. பிப்ரவரி இறுதியில் இந்த 21 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது அனேகமாக தெரிந்துவிடும்.