ரூ.14 கோடி பணமோசடி: கேரளப்பெண் புகாரில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேர விசாரணை முடிந்தது
ரூ. 14 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் கேரள அமலாக்கத்துறையில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பண மோசடி புகாரின் பேரில் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தியபின்னர் அவர் அனுப்பப்பட்டுள்ளார்.
சி.விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி கேரளப் பெண்ணின் பகீர் புகார்
ரூ.14 கோடி மோசடி செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் நெல்லை டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். சி. விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் நெல்லை டிஐஜியிடம் புகார் அளித்திருந்தார். பணமோசடி குறித்து கேரள அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், சென்னை டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாக தெர்வித்திருந்தார்.
ரூ.14 கோடி பணமோசடி: கேரளப்பெண் புகாரில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை
குடும்ப நண்பர் மோசடி செய்தார்
கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர், அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது குடும்ப நண்பர் என்றும், தன்னிடம் ரூ.14 கோடி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயபாஸ்கர் ஏராளமான பணத்தை தங்கமாக மாற்றி வைத்துள்ளார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். சி. விஜயபாஸ்கரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் என்று ஷர்மிளா தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா மூலம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நெல்லையில் புகார் அளித்தப்பின் பேட்டி அளித்த புகாரில்
திருமணவிழாவில் அறிமுகமான விஜயபாஸ்கர்
"கடந்த 2013-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், எனது கணவரும் அறிமுகமாயினர். பின்னர் எங்களது வீடு, கடைகளுக்கு அவர் வந்து சென்றார். எங்களோடு இணைந்து தொழில் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
எங்களிடம் இருந்த ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தொழிலில் முதலீடு செய்வதாகவும் விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் தெரிவித்திருந்தனர். அதன்படி, ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை 2017 ஜனவரி முதல் வாரத்தில் 3 பகுதிகளாக பிரித்து சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் வைத்து அவர்களிடம் ஒப்படைத்தோம்.
பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல்
கடந்த 2018-ம் ஆண்டு வேறுதொழில் நிறுவனம் தொடங்குவதற்காக விஜயபாஸ்கரிடம் நகைகளைக் கேட்டபோது, பல்வேறுகாரணங்களைக் கூறி மறுத்துவந்தார். 2019 மார்ச் மாதத்தில் சென்னையில் தனியார் ஹோட்டலில் வைத்து ரூ.3 கோடியை மட்டும் அளித்துவிட்டு, மீதி பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவதாக விஜயபாஸ்கரும், அவரது நண்பர்களும் மிரட்டினர். மேலும் அந்த ஹோட்டலில் 5 மணிநேரமாக எங்களை அடைத்துவைத்து மிரட்டி அனுப்பி வைத்தனர். அதன் பிறகும், மீதித் தொகையைக் கேட்டபோது மிரட்டி வந்தார்.
ஆளுங்கட்சி என்பதால் புகார் அளிக்கவில்லை, கொச்சி அமலாக்கத்துறையில் புகார்
தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் என்பதால் எங்களது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவர் மீதோ, அவரது மனைவி மீதோ அப்போது புகார் மனு அளிக்கவில்லை. தற்போது, அவர் மீது புகார் அளித்து, சட்டத்துக்கு உட்பட்டு பரிகாரம் தேடிக் கொள்ள, கொச்சி அமலாக்கப்பிரிவில் புகார் அளித்துள்ளேன். திருநெல்வேலியில் புகார் அளித்துள்ளேன். , சென்னையில் காவல்துறை இயக்குநர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவும், நீதிமன்றம் செல்லவும் உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்தார்.
அமலாக்கத்துறை சம்மன் ஆஜரான விஜயபாஸ்கர்
இந்நிலையில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் இம்மோசடி புகார் குறித்து விசாரிக்க சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று சி.விஜயபாஸ்கள் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவரது பல்வேறு தொழில்கள், கேரள பெண்ணிடம் பெற்ற பணம் குறித்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் வருமான வரித்துறையில் அவர் தாக்கல் செய்த விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் பல்வேறு கேள்வியை எழுப்பியதாக கூறப்படுகிறது.