மாஜி அமைச்சர் 'டிஸ்மிஸ்' மணிகண்டன் திடீரென ஓபிஎஸ்- உடன் சந்திப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சென்னையில் சந்தித்து பேசினார்.
அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 7-ந் தேதி யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட உள்ளது.
கோவையில் அதிகரித்த கொரோனா.. தனிமைப்படுத்தல் விதிமுறையில் அதிரடி மாற்றம்
புறக்கணித்த ஓபிஎஸ்
இந்நிலையில் சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தார். அதேநேரத்தில் வீட்டில் தமது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
மணிகண்டன் சந்திப்பு
இந்த ஆலோசனையில் கட்சிப் பணிகளைப் பற்றி மட்டுமே பேசியதாக கேபி முனுசாமி உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்.
அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ்
கேபிள் விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே அமைச்சர் மணிகண்டன்தான். அமைச்சரவை நீக்கத்துக்குப் பின் அமைதியாக இருந்த மணிகண்டன் இப்போது ஓபிஎஸ் அணிக்கு தாவி இருக்கிறார்.
பொதுக்குழு ஆட்சேர்ப்பு?
அதிமுகவின் செயற்குழுவில் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தனர். பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடியை ஆதரித்தனர். தற்போது முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், அதிருப்தியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வேலையில் குதித்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு என்பதை இந்த சந்திப்பு காட்டுகிறது.