அரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்
தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தனது தொழிலை முழுமூச்சாக கவனிக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
சென்னை: அரசியல் உள்ளடி வேலைகளால் தேர்தலில் தோல்வியடைந்ததாக நினைக்கும் மாஜி அமைச்சர் மஃபா பாண்டியராஜன், அரசியலுக்கு சில காலங்கள் பிரேக் விட்டு விட்டு சொந்த தொழிலை கவனிக்க முடிவு செய்துள்ளார். தீவிர அரசியலுக்கு வந்ததால் மாஃபா மற்றும் சி.எல். மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது மீண்டும் மாஃபா சி.எல். நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்.
மாஃபா எனும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாண்டியராஜன். பாண்டியராஜனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமம். இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்த்தபடி படித்தவர்.
சிவகாசியில் உள்ள எஸ்.ஹெச்.என்.வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பையும் நிறைவு செய்தார். அதன்பின் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூரில் உள்ள புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
பிசினஸ் பயணம்
வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணியில் சேர்ந்தார். 1992ம் ஆண்டு மாஃபா என்கிற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவனத்தை துவங்கினார். அன்றில் இருந்து தான் மாஃபா பாண்டியராஜன் ஆக மாறினார்.
புள்ளி விபர புலி
அரசியல் ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். சட்டசபையில் புள்ளி விபரமாக பேசி விஜயகாந்துக்கே டஃப் கொடுத்தவர்.
சட்டசபையில் பேச்சு
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, பாண்டியராஜன் புள்ளிவிபரங்களை அடுக்கினார். அவர் பேசும்போது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இரண்டு முறை குறுக்கிட்டு விளக்கம் கொடுத்தார். இது அப்போது பரபரப்பாக ஊடகங்களில் வெளியானது.
அதிமுக எம்எல்ஏ
சில ஆண்டுகளிலேயே விஜயகாந்தின் அதிருப்தி எம்எல்ஏ லிஸ்ட்டில் சேர்ந்து ஜெயலலிதாவை சந்தித்து பின்னர் அதிமுகவில் இணைந்தார். 2016ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார்.
ஆவடி தொகுதியில் பணிகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதாரவு நிலையில் இருந்த பாண்டியராஜன், ஓபிஎஸ் பக்கம் சென்றார். இதனால் அமைச்சர் பதவி பறிபோனது. மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் இணையவே, பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக நான்காண்டு காலம் பதவி வகித்தார். ஆவடி தொகுதியில் எம்எல்ஏவாக பல பணிகளை செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தோல்வி
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல மாஜி அமைச்சர்கள் வெற்றி பெற்ற நிலையில் உள்ளடி காரணமாக தோல்வியடைந்ததாக அதிருப்தியடைந்தார் பாண்டியராஜன். இதன் காரணமாக கடந்த இரு மாதங்களாகவே அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருந்தார். தற்போது பிசினஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.
தொழிலை கவனிக்க முடிவு
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாண்டியராஜன், ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது மாஃபா நிறுவனம். தீவிர அரசியலில் ஈடுபட்டதால் தொழிலை கவனிக்க முடியவில்லை. தற்போது மீண்டும் தொழிலை கவனிக்க முடிவெடுத்துள்ளேன் என்று கூறினார்.
அதிமுகவில் பதவி
இதற்காக தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன் என்று கூறியுள்ளார். முழுவதுமாக அரசியலை விட்டு நான் விலகவில்லை. அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் தொடர்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
வேலை வாய்ப்பு
தொழில்முனைவராக இருந்து அமைச்சரான பாண்டியராஜன் 1992ஆம் ஆண்டு மாஃபா மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார். 60,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட மாஃபா நிறுவனம் 2010ஆம் ஆண்டிலேயே 1000கோடி என்கிற இலக்கை எட்டியது. அந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 3.5 லட்சம் ஊழியர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் பாண்டியராஜன்.
பாண்டியராஜனுக்கு வாழ்த்து
இந்தியாவில் 40 இடங்களில் 56 அலுவலகங்களை கொண்டு இயங்கும் சிஐஇஎல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் அவர் தொழில்துறைக்கு திரும்பியிருப்பதை வரவேற்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மனிதவள மேம்பாட்டு நிறுவனம்
கடந்த 2015 ஆம் ஆண்டில் பெங்களூவில், 3 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மனிதவள மேம்பாடு கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கி, தொழிலில் இறங்கினார். சிஐஇஎல் ஹெச்.ஆர் சர்வீஸ் என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தை பாண்டியராஜனும், அவரது மனைவி லதா ராஜன் உட்பட நான்கு பேர் நடத்தி வருகின்றனர்.
பங்குதாரர்கள் ஒப்புதல்
தீவிர அரசியலுக்கு வந்ததால் மாஃபா மற்றும் சிஐஇஎல் மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது மீண்டும் சிஐஇஎல் ஹெச்.ஆர். மற்றும் மாபா ஸ்ட்ரேட்டஜி ஆகிய நிறுவனங்களின் தலைவராக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை நியமிப்பதற்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.