ஓபிஎஸ் அணியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் எஸ்கேப்- எடப்பாடியுடன் அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை
சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் அணியில் இருந்த மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியது பரபரபை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் உதயகுமார் ஆகியோரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. களநிலவரம் என்ன என தெரிந்தும் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
அதிமுகவின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், மாஜி ஓபிஎஸ் அணியினர் என பலரும் இப்போது எடப்பாடியார் முகாமில் இருக்கின்றனர். ஆனாலும் திடீரென ஓபிஎஸ் நானே முதல்வர் வேட்பாளர் என சலங்கை கட்டி ஆடுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்திற்கு சென்று திடீரென சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
ஓபிஎஸ் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து தமக்கு ஆதரவை திரட்டுகிற முயற்சியில் தீவிரம் காட்டுகிறார் ஓபிஎஸ். இன்று காலை கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாஜி அமைச்சர் மணிகண்டனும் ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இன்று மாலை அமைச்சர் உதயகுமார், ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார்.
ஈபிஎஸ் முகாம் சந்திப்புகள்
இச்சந்திப்புகள் நடைபெற்ற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவருமான நத்தம் விஸ்வநாதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
தனித்துவிடப்பட்ட நத்தம் விஸ்வநாதன்
அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்ட அதிமுகவிலும் அவருக்கான இடம் என்பது இல்லாமாலேயே காணமால் ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் திண்டுக்கல் அதிமுக மாவட்ட 2- ஆக பிரிக்கப்பட்டதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டார் நத்தம் விஸ்வநாதன்.
எடப்பாடி அணியில் நத்தம் ஐக்கியம்
இதனால் அரசியலில் அடுத்த கட்ட ஆட்டத்தை நத்தம் விஸ்வநாதன் தொடங்கிவிட்டார். இப்போது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் நத்தம் விஸ்வநாதனுக்கு ஏறுமுகம்தான்.. இன்னமும் சொல்லப் போனால் வேறுவழியே இல்லாமல்தான் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டிருக்கிறார் அமைச்சர் சீனிவாசன். இந்த நிலையில்தான் ஓபிஎஸ் அணிக்கு குட்பை சொல்லும்விதமாக முதல்வர் எடப்பாடியாரை நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2 அமைச்சர்கள் ஆலோசனை
இதேபோல் அமைச்சர் உதயகுமார், தங்கமணி ஆகியோரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். முன்னதாக அமைச்சர் உதயகுமார், ஓபிஎஸ் வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.