நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் அண்மையில் விலகினர். இவர்களில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (27.1.2021), மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இராமநாதபுரம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி - மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சு.அமர்நாத் - வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் மு.இரமேஷ் - திருவாடானை தொகுதி பொருளாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.
அதுபோது கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், வெளிநாடுவாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், எம்.பி., சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு திமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.