நவீன காந்தி கலாம்.. கால்கள் கடுத்தாலும்.. கண்கள் பூத்தாலும்.. இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியுமா?
சென்னை: மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று.
மறைந்த பண்டித நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் குறிப்பாக மாணவர்களாலும் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம்.
பண்பாளர்.. படித்தவர்
ஜாதீய பலமோ, மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண தலைவராக குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம். படித்தவர்... பண்பாளர்.. உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்த துளியிலும் தேச பக்தி உணர்வை இழைத்து கொண்டவர்.
விஞ்ஞான துறை
அதேபோல, தத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும், கல்வித்துறையில் பண்டித்துவம் பெற்ற டாக்டர் ஜாகீர் உசேனுக்கு பிறகு விஞ்ஞானத்தறையில் சாதனை புரிந்த அப்துல்கலாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாக வந்தது பாராட்டப்பட வேண்டியதும், பெருமை பட வேண்டியதும் ஆகும்.
எளிமை மாளிகை
100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில் இவர் இருந்த காலத்தில், சாதாரணமாகவும், இயல்பாகவும், நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடும் அவரது உயர்ந்த உள்ளம் பாராட்டுக்குரியது. குடியரசு தலைவர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றியவர்.
அரசியல்வாதியா?
விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் இந்த ராக்கெட் விஞ்ஞானி இந்தியவின் பெருமையை விண்ணை தாண்டி நிலைநாட்டியவர். உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் விக்க வைத்தார். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட இவர் சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி கிடையாது.
தலைநிமிர வைத்தவர்
குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்கு பிறகு இந்தியாவை தலைநிமிர வைத்தவர் கலாம்.
காலம் கடந்தாலும்..
இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவரது பொன்மொழிகளே ஊன்றுகோலாக அவர்களை இன்றுவரைதாங்கி பிடித்து வருகிறது.. அவர் இறந்து வருடங்கள் கடந்தாலும், அவரை பற்றியோ அல்லது அவரை பற்றின செய்திகளையோ, நாம் பேசாமலும், நினைக்காமலும் நாட்களை கடத்த முடியாதுதான் இன்னும் பல காலம் கடந்தாலும், கல்லாக, சிலையாக, ஓவியமாக, புத்தகமாக, கலாம் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
கரைபடாதவர்
குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்பவர். எத்தனையோ குடியரசு தலைவர்கள் வந்தாலும் அது கலாம் போல ஆகுமா என்ன? இப்பப்பட்ட அப்பழுக்கற்ற - தேச பக்தியை மூச்சாக கொண்ட - நடுநிலை தவறாத - கறைபடாத கைகளையுடைய அரசியல்வாதியை நாம் பார்க்க முடியுமா? இமயம் முதல் குமரி தேடிக் கொண்டுதான் இருக்கிறாம். கால்கள் கடுத்ததும், கண்கள் பூத்ததும்தான் மிச்சம்.
[ம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல்]