மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் காலமானார்... அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Recommended Video
சென்னை: நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77.
நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியை சேர்ந்தவர் எழுத்தாளரும், மூத்த தமிழறிஞருமான க.ப. அறவாணன். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தமிழ் மக்கள் வரலாறு போன்றவை அடங்கும்.
சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினை 3 முறை பெற்றுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மூத்த தமிழறிஞர் க.ப. அறவாணன் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். சென்னை அமைந்தகரை இல்லத்தில் அறவாணன் உயிர் பிரிந்தது. புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தராக க.ப. அறவாணன் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் முன்னேற்றம் குறித்தே நாளும் சிந்தித்த பெருந்தகை அறவாணன் என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் அறவாணன் மறைவு தமிழகத்திற்கும், உலகத் தமிழருக்கும் பேரிழப்பு என பாஜக மாநில தலைவர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். இதே போல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.