கொரோனா குறைந்த.. சென்னை உட்பட இந்த 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்.. விரிவான தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைவாக உள்ள சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதலாகப் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகப் போடப்பட்டிருந்த ஊரடங்கு வரும் 28ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த முறை மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை.
3 வகை
அதேபோல கொரோனா சற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக கட்டுக்குள் வந்துள்ள நான்கு மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி, கடைகள் இயங்கும் நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 மாவட்டங்கள்
ஒரு காலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்த தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இந்த மூன்றாம் வகையில் இடம்பெற்றன. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல நடைபாதைகளில் காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்பவர்களும் காலை 6 முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் பார்சல்
உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் செயல்படலாம். இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் வரை காலை 06.00 மணி முதல் இரவு 09.00 இயங்கலாம். இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி
சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர். அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகச் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
தொழிற்சாலைகள்
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்யக் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
கடைகள் செயல்பட அனுமதி
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படலாம்
வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விற்பனை கடைகள், வாகன பழுதுபார்க்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி அனுமதிக்கப்படும்.
அனுமதி
காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சலூன்கள்
தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அனுமதிக்க வேண்டும். என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
பொது போக்குவரத்து
மேலும், இந்த 4 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மெட்ரோ ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்கலாம்.வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், A ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.