5 ஆண்டுகள் தடை- பிஎப்ஐ ஆபத்தான இயக்கம்..4 மாதங்களுக்கு முன்பு எச்சரித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !
சென்னை: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம் என தற்போது தடை செய்யப்படுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
2006-ம் ஆண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் பல மாநிலங்களில் இயங்கி வந்த இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இந்த இயக்கத்தை உருவாக்கின. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வலிமையுடன் செயல்பட்டு வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் இந்துத்துவா இயக்கங்களுக்கும் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. அத்துடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் தடை செய்யப்பட்ட சிமி, இந்தியன் முஹாஹிதீன் இயக்கங்களுக்கும் தொடர்பிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தும் வந்தது.
உச்சக்கட்ட பதற்றம்.. பிஎஃப்ஐ மற்றும் துணை அமைப்புகள் மீதான தடையால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
பிஎப்ஐக்கு தடை
தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு சட்டவிரோதமான இயக்கம் என மத்திய அரசு பிரகடனப்படுத்தி தடை செய்துள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் முன்னணி அமைப்புகளும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக நாட்டின் பல மாநிலங்களில் இந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தி 300க்கும் அதிகமானோரை கைது செய்தும் இருந்தனர்.
ஆபத்தான இயக்கம்- ஆர்.என்.ரவி
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ஒரு ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தது. சென்னையில் கடந்த மே மாதம் மறைந்த லெப்டினண்ட் ஜெனரல் சப்ரோடா மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் சமூக அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை அமைப்பு போல இந்த இயக்கம் செயல்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான், சிரியா என யுத்தம் நடைபெறும் நாடுகளுக்கு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது என கூறினார்.
16 முகமூடிகளுடன் பிஎப்ஐ
மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பானது 16 முகமூடிகளை அணிந்துள்ளது. பல்வேறு வேறு பெயர்களில் மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி இருந்தார்.
பிஎப்ஐ எதிர்ப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவர். நாகாலாந்து தீவிரவாத இயக்கங்களுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர். நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றினார். இதனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த திடீர் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷேக் முகமது அன்சாரி கண்டனம் தெரிவித்து அப்போது அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஷேக் முகமது அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியபோது, எங்கள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பி இருந்தார்.